/

8 மாதம் சொகுசு வாழ்க்கை: ரூ.25 லட்சத்தை செலுத்தாமல் தப்பித்த நபர்

மும்பையில் கடந்த 8 மாதங்களாக தனியார் நட்சத்திர விடுதியில் தங்கியிருந்து ரூ.25 லட்சம் அறை வாடகையைக் கொடுக்காமல் தப்பித்தவரை காவல்துறை தேடி வருகிறது.

News image

8 மாதம் சொகுசு வாழ்க்கை: ரூ.25 லட்சத்தை செலுத்தாமல் தப்பித்த ஆசாமி (கோப்புப்படம்)

Updated On :2 செப்டம்பர் 2021, 10:47 am

DIN

மும்பையில் கடந்த 8 மாதங்களாக தனியார் நட்சத்திர விடுதியில் தங்கியிருந்து ரூ.25 லட்சம் அறை வாடகையைக் கொடுக்காமல் தப்பித்தவரை காவல்துறை தேடி வருகிறது.

மகாராஷ்டிர மாநிலத்தின் அந்தேரி பகுதியைச் சேர்ந்தவர் முரளி காமத். இவர் தனது 10 வயது மகனுடன் கடந்த 8 மாதங்களாக கார்கர் பகுதியில் உள்ள ஒரு தனியார் நட்சத்திர விடுதியில் இரண்டு அறைகளைப் பதிவு செய்து பயன்படுத்தி வந்துள்ளார்.

43 வயதான முரளி காமத் தான் திரைத்துறையில் பணியாற்றி வருவதாகவும் திரைப்படத்திற்கான பணிகளுக்காக அறையை பதிவு செய்வதாகவும் விடுதி நிர்வாகிகளிடம் தெரிவித்துள்ளார்.

இதனை நம்பி அவரிடம் முன்பணம் மட்டும் பெற்றுக்கொண்டு இரண்டு அறைகளைப் பயன்படுத்த விடுதி நிர்வாகம் அனுமதியளித்துள்ளது. இந்நிலையில் அறை வாடகையாக ரூ.25 லட்சத்தை செலுத்த முரளி காமத்தை அணுகியுள்ளனர் விடுதி நிர்வாகத்தினர்.

இதனைத் தொடர்ந்து விடுதி ஊழியர்களை ஏமாற்றிவிட்டு முரளி காமத் குளியலறை ஜன்னல் வழியாக விடுதியை விட்டு வெளியேறி தப்பித்துள்ளார். நீண்ட நேரமாகியும் முரளி காமத் வெளிவராததைத் தொடர்ந்து அவரது அறைக்குள் சென்று பார்த்த விடுதி நிர்வாகத்தினர் அவர் தப்பிச் சென்றதை அறிந்து அதிர்ச்சியடைந்தனர்.

அதனைத் தொடர்ந்து விடுதி நிர்வாகத்தினர் புகாரின்பேரில் காவல்துறையினர்  முரளி காமத் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.