டோக்கியோ பாராலிம்பிக் போட்டியில் சனிக்கிழமை காலை நடைபெற்ற கலப்பு பி4-50 மீ. பிஸ்டல் எஸ்எச்1 பிரிவில் பதக்கம் வென்று சாதனை படைத்த இந்திய வீரா் மணீஷ் நர்வால், சிங்கராஜ் அதனாவுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
டோக்கியோவில் மாற்றுத்திறனாளிகளுக்கான பாராலிம்பிக் போட்டி நடைபெற்று வரும் நிலையில், இந்திய வீரர்கள் பதக்க வேட்டையை நடத்தி வருகின்றனர்.
சனிக்கிழமை காலை நடைபெற்ற கலப்பு பி4-50 மீ. பிஸ்டல் எஸ்எச்1 பிரிவில் இந்திய வீரா்மணீஷ் நர்வால் தங்கப் பதக்கமும், சிங்க்ராஜ் அதனா வெள்ளிப் பதக்கமும் வென்று சாதனை படைத்துள்ளனர். இதன் மூலம் இந்தியாவின் மொத்த பதக்க எண்ணிக்கை 15 ஆக உயா்ந்தது.
ஏற்கனவே, 10 மீட்டர் துப்பாக்கி சுடுதல் போட்டியில் சிங்ராஜ் அதனா வெண்கலப் பதக்கம் வென்றுள்ள நிலையில், தற்போது வெள்ளி பதக்கத்தை வென்று சாதனை படைத்துள்ளார்.
பாராலிம்பிக்கில் இந்தியா 3 தங்கம், 7 வெள்ளி, 5 வெண்கலம் என 15 பதக்கங்களுடன் 34 ஆவது இடத்தில் உள்ளது.
இந்நிலையில், பாராலிம்பிக்கில் பதக்கம் வென்றுள்ள வீரர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி தனித்தனியே வாழ்த்து தெரிவித்துள்ளார்.
வாழ்த்து செய்தியில், கலப்பு பி4-50 மீ. பிஸ்டல் எஸ்எச்1 பிரிவில் சிறப்பாக ஆடி தங்கம், வெள்ளிப் பதக்கம் வென்று தேசத்துக்கு பெருமை சேர்த்துள்ள வீரா் மணீஷ் நர்வால், சிங்ராஜ் அதனாவுக்கு வாழ்த்துகள். இவர்களது சாதனையால் தேசம் மகிழ்ச்சியடைகிறது. இந்திய விளையாட்டுக்கு ஒரு சிறப்பான தருணம் இது. இவர்களது எதிர்கால முயற்சிகள் சிறக்க வாழ்த்துகிறேன் என்று கூறியுள்ளார்.