புதுதில்லி: நாட்டில் புதன்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் புதிதாக 37,875 பேருக்கு கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அதே நேரத்தில் நோய்த் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை 3,91,256-ஆக உள்ளதாக மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மத்திய சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது: நாட்டில் புதன்கிழமை காலை 9 மணி வரையிலான 24 மணி நேரத்தில் 37,875 பேருக்கு புதிதாக தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
39,114 பேர் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தம் 3,22,64,051 பேர் குணமடைந்துள்ளனர். இன்றைய நிலவரப்படி சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை 3,91,256-ஆக உள்ளது. இது மொத்த பாதிப்பில் 1.18 சதவீதமாகும்.
கடந்த 24 மணி நேரத்தில் தொற்று பாதிப்புக்கு 369 பேர் உயிரிழந்தனர். இதனால், மொத்த கரோனா உயிரிழப்பு 4,41,411-ஆக அதிகரித்துள்ளது.
நாடு முழுவதும் செலுத்தப்பட்டுள்ள கரோனா தடுப்பூசியின் மொத்த எண்ணிக்கை 70,75,43,018 ஆக அதிகரித்துள்ளது.
நாட்டிலேயே கரோனா பாதிப்பு அதிகமுள்ள மாநிலமாக இருக்கும் கேரளத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 25,772 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்றுக்கு 189 பேர் உயிரிழந்துள்ளனர்.