ஆப்கானிஸ்தான் வான்வழியை தவிர்த்து பாகிஸ்தான் வான்வழியாக பிரதமர் நரேந்திர மோடியின் விமானம் அமெரிக்காவுக்கு செல்லவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிரதமர் மோடி 4 நாள்கள் அரசுமுறை பயணமாக சிறப்பு விமானம் மூலம் அமெரிக்காவுக்கு இன்று காலை புறப்பட்டுச் சென்றார்.
இந்நிலையில், ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றிய பதற்றம் இன்னும் குறையாததால், அந்நாட்டின் வான்வழியை புறக்கணித்து பாகிஸ்தான் வான்வழியை பயன்படுத்த இந்திய அரசு தரப்பில் அனுமதி கோரப்பட்டது.
இந்தியாவின் கோரிக்கையை ஏற்று பிரதமர் மோடியின் விமானத்திற்கு பாகிஸ்தான் அரசு அனுமதி அளித்துள்ளதாக மத்திய அரசின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, ஜம்மு-காஷ்மீரில் அரசியலமைப்பு சட்டம் 370ஐ இந்திய ரத்து செய்ததையடுத்து பிரதமர் மோடி, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் விமானத்திற்கு பாகிஸ்தான் அரசு அனுமதி மறுத்தது குறிப்பிடத்தக்கது.