மூன்று நாள் அரசு முறை பயணமாக பிரதமர் மோடி இன்று அமெரிக்கா புறப்பட்டு சென்றார். அமெரிக்க பயணம் குறித்து மோடி ட்விட்டர் பக்கத்தில், "அமெரிக்காவுடனான வியூக ரீதியான கூட்டணி இப்பயணத்தின் மூலம் வலுப்படுத்தப்படும். ஜப்பான், ஆஸ்திரேலியா நாடுகளுடனான உறவு மேலும் மேம்படுத்தப்படும்" என பதிவிட்டிருந்தார்.
முன்னதாக, அமெரிக்க அதிபர் பைடனுடன் மேற்கொண்ட ஆலோசனைக் கூட்டத்தில், "அமெரிக்க, இந்தியா நாடுகளிடையேயான உலகளாவிய விரிவான வியூக ரீதியான கூட்டணி மறுசீரமைக்கப்பட்டு பரஸ்பர நலன் சார்ந்த பிராந்திய மற்றும் உலகளாவிய பிரச்னைகள் குறித்த கருத்துகள் பரிமாறிக்கொள்ளப்படும்" என பிரதமர் மோடி தெரிவித்திருந்தார்.
வாஷிங்டனில் செப்டம்பர் 24ஆம் தேதி நடைபெறவுள்ள கூட்டத்தில், அமெரிக்க அதிபராக ஜோ பைடன் பொறுப்பேற்ற பிறகு முதல்முறையாக பிரதமர் மோடி அவரை நேரில் சந்திக்கவுள்ளார். ஆப்கன் விவகாரம் அதன் தாக்கங்கள், சீனாவின் ஆதிக்கம், தீவிரவாதம் மற்றும் எல்லை தாண்டிய பயங்கரவாதம், அமெரிக்க - இந்திய கூட்டணியை மேலும் விரிவுப்படுத்துவது எப்படி போன்ற வி்வகாரங்களுக்கு இதில் முக்கியத்துவம் அளிக்கப்படவுள்ளது.
இதையும் படிக்க | அமெரிக்கா புறப்பட்டார் மோடி
ஜோ பைடன் நடத்தும் கரோனா உலகளாவிய உச்ச மாநாட்டில் பிரதமர் மோடி கலந்து கொள்வார் என வெளியுறவுத்துறை செயலாளர் ஹர்ஷ் ஷ்ரிங்லா தெரி்வித்திருந்தார். கரோனா பெருந்தொற்றுக்கு மத்தியில் அண்டை நாடுகளை தவிர்த்து முதல்முறையாக, பிரதமர் மோடி வெளிநாட்டுக்கு பயணம் செல்லவுள்ளார். வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ஆகியோர் அவருடன் சென்றுள்ளனர்.
வாஷிங்டனில் உள்ள முன்னணி அமெரிக்க நிறுவனங்களின் நிர்வாகிகளையும் மோடி சந்திக்கவுள்ளார். நியூயார்க்க்கு செப்டம்பர் 24ஆம் தேதி செல்லும் மோடி, ஐநா பொதுச் சபை கூட்டத்தில் கலந்து கொள்ளவுள்ளார்.