மத்திய அமைச்சர்களை பிரதமர் மோடி வரும் செவ்வாய்கிழமை சந்திக்கவுள்ளார். கடைசியாக, செப்டம்பர் 14ஆம் தேதி அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இந்நிலையில், வரும் செவ்வாய்கிழமை மாலை 4 மணிக்கு அமைச்சரவை கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜூலை மாதம் அமைச்சரவை விரிவாக்கம் நடைபெற்றதை தொடர்ந்து, நான்காவது முறையாக அமைச்சர்கள் கூட்டம் நடைபெறவுள்ளது. அதேபோல், எந்த ஒரு நிகழ்ச்சி நிரலும் இல்லாமல் வரும் வாரங்களில் மூன்று அல்லது நான்கு முறை அமைச்சரவை கூட்டம் நடத்தப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதில், தங்களின் யோசனைகளையும் பிரச்னைகளையும் எந்த வித தயக்கமும் இன்றி பகிர்ந்து கொள்ள மத்திய அமைச்சர்கள் அறிவுறுத்தப்பட்டிருக்கிறார்கள். கடந்த முறை நடைபெற்ற கூட்டத்தில், நேர மேலாண்மை, செயல்திறன் குறித்து மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானும் சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியாவும் விளக்கினர்.
இதையும் படிக்க | இன்னும் எத்தனை காலம்தான் முகக்கவசம் அணிவது?
அதேபோல், முன்னாள் பாதுகாப்புத்துறை அமைச்சர் மனோகர் பாரிகரை மேற்கோள் காட்டி எளிமையின் தேவை குறித்து பிரதமர் மோடி பேசியதாக அலுவலர்கள் தெரிவித்தனர். கடந்த முறை அமைச்சரவை கூட்டத்திற்கு பிறகு, அனைத்து துறை செயலாளர்களையும் மோடி சந்தித்து பேசினார்.