உலக அமைதி மாநாட்டில் மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி கலந்து கொள்வதற்கு வெளியுறவுத்துறை அமைச்சகம் அனுமதி மறுத்துள்ளது. வாடிகனில் இந்தாண்டு அக்டோபர் மாதம் உலக அமைதி மாநாடு நடைபெறவுள்ளது. இந்த மாநாட்டில், ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலா மெர்கல், போப் பிரான்சிஸ், இத்தாலி பிரதமர் மரியோ டிராகி ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளனர்.
அன்னை தெரசாவை மையப்படுத்தி இந்த மாநாடு நடைபெறவுள்ளது. கலந்து கொள்ள உள்ள அனைரும் உலக தலைவர்கள் என்றும் எனவே மாநில முதலமைச்சராக உள்ள மம்தாவுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. இது அரசியல் ரீதியான நடவடிக்கை என்றும் சிலர் கூறியுள்ளனர்.
முன்னதாக, அமைதி மாநாட்டுக்கு அதிக அளவில் ஆட்களை அழைத்து வர வேண்டாம் என மம்தா பானர்ஜியிடம் இத்தாலி அரசு கோரிக்கை விடுத்திருந்தது. பின்னர், தொழில் நிறுவனங்களின் தலைவர்களை அழைத்த செல்ல மம்தா வெளியுறவுத்துறை அமைச்சகத்திடம் அனுமதி கோரியிருந்தார். தற்போது, அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
இதை கடுமையாக விமரிசித்துள்ள திரிணமூல் செய்தித்தொடர்பாளர் தேபாங்ஷு பட்டாச்சார்யா தேவ், "மம்தா ரோமுக்கு செல்ல மத்திய அரசு அனுமதி மறுத்துள்ளது. முன்னதாக, சீனா செல்ல அனுமதி மறுக்கப்பட்டது.
சர்வதேச உறவுகளையும் இந்திய நலனை கருத்தில் கொண்டு அந்த முடிவை ஏற்று கொண்டோம். ஆனால், இத்தாலியால் என்ன பிரச்சனை பிரதமர் மோடி அவர்களே? மேற்குவங்கத்திற்கும் உங்களுக்கும் என்ன தான் பிரச்னை?" என பதிவிட்டுள்ளார்.