வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் மேற்கொண்ட நாடு தழுவிய அளவிலான பாரத் பந்த் போராட்டம் வெற்றி பெற்றது என
பாரதிய கிஷான் யூனியன் அமைப்பின் தலைவர் ராகேஷ் டிகைத் தெரிவித்துள்ளார்.
பல்வேறு இடங்களில் பொதுமக்கள் திரளாக வந்து போராட்டத்திற்கு ஆதரவு அளித்ததால் இந்த அளவிற்கு வெற்றி கிடைத்துள்ளதாகவும் கூறினார்.
மத்திய அரசின் மூன்று புதிய வேளாண் சட்டங்கள் கடந்த ஆண்டு செப்டம்பர் 27- ஆம் தேதி நாடாளுமன்றத்தில் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டன. இந்த மூன்று சட்டங்களுக்கும் எதிர்ப்பு தெரிவித்து கடந்த ஆண்டு நவம்பர் மாதம் முதல் தில்லி எல்லைகள், பஞ்சாப், ஹரியாணா ஆகிய மாவட்டங்களில் விவசாயிகள் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் வேளாண் சட்டங்கள் நிறைவேற்றப்பட்ட இந்நாளில் நாடு தழுவிய போராட்டத்திற்கு விவசாய சங்கங்கள் அழைப்பு விடுத்தன. அதன்படி, இன்று நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் விவசாய சங்கங்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன.
இன்று காலை 6 மணி முதல் மாலை 4 மணி வரை முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றது.
போராட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய கிஷான் யூனியன் அமைப்பின் தலைவர் ராகேஷ் டிகைத், விவசாயிகளின் நாடு தழுவிய போராட்டம் மக்கள் ஆதரவால் வெற்றி பெற்றுள்ளது.
விவசாயிகள் போராட்டத்தால் பொதுமக்கள் சிரமத்தை அனுபவித்திருக்கலாம். ஆனால் கடந்த 10 மாதங்களாக வெயில், மழையில் நெடுஞ்சாலைகளில் அமர்ந்து போராடி வந்த விவசாயிகளின் பக்கம் ஒற்றுமையுடன் நிற்க வேண்டும் என்று கூறினார்.