நாட்டில் கடந்த மார்ச் மாதம் இதுவரை 122 ஆண்டுகள் இல்லாத அளவு வெப்பநிலை பதிவாகியுள்ளதாக இந்திய வானியல் கழகம் தெரிவித்துள்ளது.
போதிய மழையின்மை காரணமாக கடந்த மார்ச் மாதம் வட இந்திய மாநிலங்களில் வறண்ட வானிலை நிலவிவந்தது. தில்லியில் மார்ச் மாதம் 15.9 மிமீ மழைப்பொழிவு பாதிவாகி இருந்தது.
இதையும் படிக்க | தமிழகத்தில் 4 நாள்களுக்கு மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்
மார்ச் மாதம் முழுவதும் பல்வேறு மாநிலங்களிலும் வெயில் அதிகமாகவே இருந்தது. கடந்த 2010 ஆண்டு மார்ச் மாதம் பதிவான 33.09 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையே இதுவரை பதிவான அதிகபட்ச மார்ச் மாதாந்திர வெப்பநிலையாக இருந்து வந்தது. இந்நிலையில் 2022, மார்ச் மாதம் இதுவரை இல்லாத மாதாந்திர சராசரி வெப்பநிலையை பதிவு செய்துள்ளது. 122 ஆண்டுகளில் இல்லாத அளவில் மார்ச் மாதம் 33.1 டிகிரி செல்சியஸ் சராசரி வெப்பநிலை பதிவாகியுள்ளதாக இந்திய வானியல் கழகம் தெரிவித்துள்ளது.
அதனைத் தொடர்ந்து ஹரியாணா, சத்தீஸ்கர், ஹிமாச்சலப்பிரதேசம், ஜம்மு, மகாராஷ்டிரம், குஜராத், உத்தரப்பிரதேசம், மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட 10 மாநிலங்களுக்கு வெப்ப அலை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.வெப்ப அலையால் மக்கள் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதால் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பின்பற்ற அறிவியலாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.