18 வயதுக்கு மேற்பட்டவர்கள் வருகிற ஏப்ரல் 10 ஆம் தேதி முதல் தனியார் தடுப்பூசி மையங்களில் முன்னெச்சரிக்கைத் தவணை கரோனா தடுப்பூசி(பூஸ்டர்) செலுத்திக்கொள்ளலாம் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
நாட்டில் கரோனாவைக் கட்டுப்படுத்த தடுப்பூசி இயக்கம் தீவிரப்படுத்தப்பட்டு வரும் நிலையில், முழுமையாக தடுப்பூசி செலுத்தியவர்களில் முன்களப் பணியாளர்கள், 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு முன்னெச்சரிக்கைத் தவணை கரோனா தடுப்பூசி(பூஸ்டர்) அரசு சார்பில் இலவசமாக செலுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் வருகிற ஏப்ரல் 10 ஆம் தேதி முதல் தனியார் தடுப்பூசி மையங்களில் முன்னெச்சரிக்கைத் தவணை கரோனா தடுப்பூசி(பூஸ்டர்) செலுத்திக்கொள்ளலாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்தி 9 மாதங்கள் நிறைவடைந்த 18 வயதுக்கு மேற்பட்டோர், வருகிற 10 ஆம் தேதி முதல் தனியார் தடுப்பூசி மையங்களில் பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக்கொள்ளலாம்.
அரசு சார்பில் செலுத்தப்பட்டு வரும் இலவச தடுப்பூசி இயக்கம் வழக்கம்போல் செயல்பாட்டில் இருக்கும் என்றும் அங்கு முதல் தவணை, இரண்டாம் தவணை மற்றும் முன்களப் பணியாளர்கள், 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு முன்னெச்சரிக்கைத் தவணை கரோனா தடுப்பூசி(பூஸ்டர்) வழக்கம்போல செலுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.