காசியாபாத்: உத்தரப்பிரதேசம் மாநிலம், காசியாபாத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளி மாணவர்கள் இரண்டு பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதை அடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மூன்று நாள்களுக்கு பள்ளிக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
உத்தரப்பிரதேசம் மாநிலம் காசியாபாத்தின் கே.ஆர். மங்கலம் பள்ளியில் 3 மற்றும் 9 ஆம் வகுப்புகளைச் சேர்ந்த இரண்டு மாணவர்கள் மூன்று நாள்களாக பள்ளிக்கு வரவில்லை. இதுகுறித்து பள்ளி நிர்வாகம் விசாரித்ததில், அவர்களுக்கு கரோனா தொற்று பாதிப்பு உறுதியானதை அடுத்து பள்ளிக்கு வரவில்லை என தகவல் கிடைத்தது.
இந்த தகவலை அடுத்து பள்ளி நிர்வாகம் திங்கள் முதல் புதன்கிழமை வரை ஆன்லைனில் பாட வகுப்புகள் நடத்த முடிவு செய்தது.
இதுதொடர்பாக பள்ளியின் முதல்வர் பெற்றோர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில், "குணப்படுத்துவதை விட தடுப்பதே சிறந்தது என்று நாம் அனைவரும் உண்மையாகவே நம்புகிறோம். பள்ளியில் இரண்டு மாணவர்களுக்கு தொற்று பாதிப்பு உறுதியாகியுள்ளதை அடுத்து மூன்று நாள்களுக்கு (ஏப்ரல் 11 முதல் ஏப்ரல் 13 வரை) பள்ளி நேரடி வகுப்புகள் நிறுத்தப்பட்டு விடுமுறை அளிக்கப்படுவதுடன், ஆன்லைன் மூலம் பாட வகுப்புகள் தொடர்ந்து நடைபெறும்," என்று முதல்வர் தெரிவித்துள்ளார்.
மேலும் ஈஸ்டர் விடுமுறைக்குப் பிறகு சாதாரண வகுப்புகள் மீண்டும் தொடங்கும் என்று அந்தக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.