மும்பை: கழிப்பறையை விட சின்ன அலுவலகத்தில் இன்று சோதனை நடத்திய மகாராஷ்டிர ஜிஎஸ்டி துறை அதிகாரிகளுக்கு இவ்வளவுப்பெரிய அதிர்ச்சி காத்திருக்கும் என்று நினைத்திருக்க மாட்டார்கள்.
மும்பையில் ஜாவேரி பஜார் பகுதியில் கழிப்பறையை விடவும் சிறிய 35 சதுர பரப்பளவு கொண்ட அலுவலகத்தில் ஜிஎஸ்டி துறை அதிகாரிகள் ஆய்வு நடத்தி, ரூ.10 கோடி மதிப்புள்ள பணம் மற்றும் வெள்ளிக் கட்டிகளை பறிமுதல் செய்திருப்பதோடு, அந்த அலுவலகத்தின் டர்ன்ஓவர் எனப்படும் விற்றுமுதல் ரூ.1,764 கோடி என்பதை கண்டறிந்து கடும் அதிர்ச்சி அடைந்தனர்.
இதையும் படிக்க.. தில்லியின் 'ஆர்' மதிப்பு என்ன சொல்கிறது? ஒருவருக்கு பாதித்தால் அது..
ஜிஎஸ்டி துறையினருக்குக் கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், சாமுண்டா என்பவருக்குச் சொந்தமான தெற்கு மும்பையின் ஜாவேரி பஜார் பகுதியில் உள்ள அலுவலகம் மற்றும் சில இடங்களில் கடந்த 16ஆம் தேதி சோதனை நடத்தப்பட்டது.
இதில், வணிக நிறுவனமாக பதிவு செய்யப்படாத சில இடங்களும் இருந்ததைக் கண்டு அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். இதில், 20ஆம் தேதி, கழிப்பறையை விடவும் மிகச் சிறிய அலுவலகம் ஒன்றில் சோதனை நடத்தப்பட்டது. அங்கே ரூ.9.78 கோடி பணம் 13 லட்சம் மதிப்புள்ள 19 கிலோ வெள்ளிக் கட்டிகள் கைப்பற்றப்பட்டன. அவை அனைத்தும், அலுவலக சுவற்றிலும், தரைப்பகுதியிலும் புதைத்துவைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையடுத்து மாநில ஜிஎஸ்டி துறையினர், சாமுண்டா புல்லியன் வங்கிக் கணக்குகளையும், நிறுவனத்தின் கணக்குகளையும் ஆராய்ந்த போது அதிர்ச்சிக்குள்ளாகினர்.
அதாவது, இந்தநிறுவனத்தின் விற்றுமுதல் 2019-20ல் ரூ.22.83 கோடியாகவும், 2020-21ல் ரூ.652 கோடியாகவும் 2021 - 22ல் ரூ.1764 கோடியாகவும் அதிகரித்திருப்பது தெரிய வந்தது.
உடனடியாக அந்த அலுவலகம் சீல்வைக்கப்பட்டு வருமான வரித்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.