இனிமையான காலகட்டத்திலும் மக்களிடையே பாஜக வெறுப்புணர்வை பரப்பிவருவதாக காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி விமர்சித்துள்ளது.
கர்நாடகத்தில் எதிர்க்கட்சி தலைவரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான சித்தராமையாவின் 75வது பிறந்தநாளையொட்டி கர்நாடகத்திற்கு ராகுல் காந்தி வருகைபுரிந்துள்ளார்.
சித்தராமையாவின் பிறந்தநாளை காங்கிரஸ் தொண்டர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். இந்தநிலையில் பிறந்தநாளையொட்டி ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சியில் காங்கிரஸ் எம்.பி. கலந்துகொண்டார்.
அப்போது பொதுமக்கள் மத்தியில் பேசிய அவர், மாநிலங்களில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் வகையில், காங்கிரஸ் கட்சி மக்களை இணைத்து வருகிறது. ஆனால் பாஜக அரசு அதற்கு எதிர்மாறாக செயல்படுகிறது. இனிமையான காலகட்டத்திலும், வெறுப்புணர்வை ஏற்படுத்தி மக்களை பிளவுபடுத்துகிறது.
சித்தராமையா காங்கிரஸ் ஆட்சியில் மக்களை வழிநடத்திய விதத்தை பாராட்ட வேண்டும். அவர் கர்நாடக மக்களுக்கு ஒரு பாதையை வகுத்தளித்தார். கர்நாடகத்திற்காக அவரிடம் இலக்கு இருந்தது. அந்த இலக்கு அனைவருக்குமானதாகவும் இருந்தது. இது பாஜகவில் தற்போது நாம் பார்த்து வருவதிலிருந்து முற்றிலும் மாறுபட்டது.
பிறந்த நாள் கொண்டாட்டங்களில் நான் பொதுவாக பங்கேற்பதில்லை. ஆனால் சித்தராமையாவுக்காக நான் வந்துள்ளேன். அவரை தனி மனிதராக மட்டுமல்லாமல், அவருடைய சிந்தனைகளுக்காக மிகவும் பிடிக்கும். எளிய மக்களின் மீது இரக்கமும் அன்பும் கொண்டவர் எனக் குறிப்பிட்டார்.