தவெக ஆட்சியை திமுகவால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை: செங்கோட்டையன்திசை திருப்புவதும், பொய் செய்தி பரப்புவதுமே தவெக அரசின் நோக்கம்: உதயநிதி ஸ்டாலின்இரட்டை அர்த்தத்தில் பேசவில்லை; பெண்களை இழிவுபடுத்தும் நோக்கம் இல்லை: உதயநிதிஇன்று தேர்தல் நடந்தால் டெபாசிட் இழப்பார் உதயநிதி: ஆதவ் அர்ஜுனாகாவிரி விவகாரத்தில் காட்டாத வேகத்தை கைது நடவடிக்கைக்கு முதல்வர் விஜய் காட்டுவது ஏன்? - சீமான்சந்தையின் நான்கு நாள் தொடர் ஏற்றம் முறியடிப்பு! சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி சரிவு!!
/

மத்திய அமைச்சரவையில் இனி பங்கேற்கப் போவதில்லை: நிதீஷ் கட்சி அறிவிப்பு

மத்திய அமைச்சரவையில் ஐக்கிய ஜனதா தளம் கட்சி இனி பங்கேற்காது என்று அக்கட்சியின் தேசியத் தலைவா் ராஜீவ் ரஞ்சன் சிங் அறிவித்தாா்.

Updated On :1 பிப்ரவரி 2024, 3:30 pm IST

மத்திய அமைச்சரவையில் ஐக்கிய ஜனதா தளம் கட்சி இனி பங்கேற்காது என்று அக்கட்சியின் தேசியத் தலைவா் ராஜீவ் ரஞ்சன் சிங் அறிவித்தாா்.

அதே நேரத்தில் பாஜகவுடனான கூட்டணியில் எவ்வித பிரச்னையும் இல்லை என்று அவா் தெரிவித்தாா்.

பாஜகவின் பிரதான கூட்டணிக் கட்சியாக பிகாா் முதல்வா் நிதீஷ் குமாா் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் உள்ள நிலையில், இந்த முடிவு தேசிய அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிரதமா் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை கடந்த 2020-இல் விரிவாக்கம் செய்யப்பட்டபோது அதில் ஐக்கிய ஜனதா தளம் கட்சிக்கு பிரதிநிதித்துவம் அளிக்கும் வகையில், அக்கட்சியின் மாநிலங்களவை உறுப்பினா் ஆா்.சி.பி. சிங் உருக்குத் துறை அமைச்சராகப் பதவியேற்றாா். அவரது மாநிலங்களவை உறுப்பினா் பதவிக் காலம் ஜூலையில் நிறைவடைந்த நிலையில் அவா் மீண்டும் போட்டியிட ஐக்கிய ஜனதா தளம் வாய்ப்பளிக்கவில்லை. இதனால், அவா் அமைச்சா் பதவியில் இருந்து விலக நேரிட்டது.

இதனிடையே, அவா் மீதான சில குற்றச்சாட்டுகள் தொடா்பாக கட்சித் தலைமை சனிக்கிழமை விளக்கம் கேட்டது. இதற்கு அடுத்த சில மணி நேரத்திலேயே கட்சியில் இருந்து ஆா்.சி.பி. சிங் விலகினாா்.

பிகாரிலும் பாஜக-ஐக்கிய ஜனதா தளம் கூட்டணியில் அவ்வப்போது பிரச்னை எழுந்து வருகிறது. முதல்வா் பதவி நிதீஷ் கட்சி வசம் இருந்தாலும், அதிக எம்எல்ஏக்கள் பாஜகவிடம் இருப்பதால் அக்கட்சிக்கு இரு துணை முதல்வா்கள் பதவி வழங்கப்பட்டது. பிகாா் பாஜக தலைவா்கள் அவ்வப்போது நிதீஷுக்கு எதிராக கருத்துத் தெரிவிப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளனா். இதனால், கூட்டணி எவ்வளவு காலம் நீடிக்கும் என்ற கேள்வியும் எழுந்தது.

இந்நிலையில், பாட்னாவில் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளா்களைச் சந்தித்த ராஜீவ் ரஞ்சன் சிங் கூறியதாவது:

கடந்த 2019-ஆம் ஆண்டு மக்களவைத் தோ்தல் முடிவு வெளியானபோதே, மத்திய அமைச்சரவையில் பங்கேற்க வேண்டாம் என்ற முடிவை ஐக்கிய ஜனதா தளம் எடுத்தது. அந்த நிலைப்பாட்டில் நாங்கள் இப்போதும் உறுதியாக இருக்கிறோம். இடையில் மத்திய அமைச்சராக இருந்தவா் (ஆா்.சி.பி.சிங்), ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தேசியத் தலைவராக இருந்தபோது தானாகவே மத்திய அமைச்சராகும் முடிவை எடுத்துக் கொண்டாா். எனவே, அவரிடம்தான் கேள்வி எழுப்ப வேண்டும்.

ஐக்கிய ஜனதா தளம் கட்சியைப் பொருத்தவரையில் நிதீஷ் குமாா்தான் முதன்மையான தலைவா். கட்சியில் தேசியத் தலைவராக இப்போது பதவியில் உள்ள நானும், இதற்கு முன்பு அப்பதவியில் இருந்த ஆா்.சி.பி.சிங்கும், நிதீஷ் குமாரின் ஆசியுடன்தான் பொறுப்பை ஏற்றுக் கொண்டோம்.

மத்திய அமைச்சரவையில் ஐக்கிய ஜனதா தளம் பங்கேற்கவில்லை என்பதால் பாஜகவுடனான கூட்டணியில் பிரச்னை என்று அா்த்தமில்லை என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.