ஆவணி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயிலின் நடை திறக்கப்பட்டுள்ளது. இதில் ஆயிரக்கணக்கான மக்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
சபரிமலை ஐயப்பன் கோயில் நடைநேற்று மாலை 5 மணிக்கு திறக்கப்பட்டது. தந்திரி கண்டரரு ராஜீவரு முன்னிலையில் மேல்சாந்தி என்.பரமேஸ்வரன் நம்பூதிரி நடையைத் திறந்துவைத்தார்.
இன்று அதிகாலை 5மணிக்கு நிர்மால்ய தரிசனம், கணபதி ஹோமம், நெய் அபிஷேகம், உஷ பூஜை, உச்ச பூஜை, தீபாராதனை, புஷ்பாபிஷேகம், அத்தாழ பூஜை உள்ளிட்டவை நடைபெற்றது.
இதே போல் 5 நாள்கள் லட்சார்ச்சனையும் நடக்கிறது. 21ஆம் தேதி வரை படிபூஜை, உதயாஸ்தமன பூஜை, கலச பூஜை, களபாபிஷேகம் போன்றவையும் நடைபெறுகின்றன. 21-ஆம் தேதி அத்தாழ பூஜைக்கு பிறகு ஹரிவராசனம் பாடல் இசைக்கப்பட்டு, இரவு 10 மணிக்கு கோயில் நடை அடைக்கப்படும்.
ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்யும் பக்தர்கள் அனைவருக்கும் தரிசன அனுமதி வழங்கப்படுகிறது. அதேபோன்று நிலக்கல்லில் உடனடி தரிசனத்திற்கான முன்பதிவும் நடைபெறும்.
ஐயப்பன் கோயில் ஓணம் பண்டிகைக்காக செப்டம்பர் 6ஆம் தேதி திறக்கப்படும் என்றும், செப்டம்பர் 10ஆம் தேதி மூடப்படும் என்றும் டிடிபி வட்டாரங்கள் தெரிவித்தன.