திருவனந்தபுரம்: கேரளத்தில், நிதிப் பற்றாக்குறையால் சிக்கித் தவித்து வரும் அரசு போக்குவரத்துக் கழகம், குறைந்தபட்ஜெட்டில் மகாபாரத சுற்றுலா திட்டங்களை அறிமுகப்படுத்தி, தனது நிதிநிலைமையை சரிசெய்ய திட்டமிட்டுள்ளது.
கேரளத்துக்கு வரும் சுற்றுலாப் பயணிகளை வெகுவாக கவரும் மகாபாரத சுற்றுலாத் தலங்களை குறைந்தபட்ஜெட்டில் அழைத்துச் செல்லும் வகையில் இந்த திட்டம் அறிமுகப்படுத்துப்படுகிறது.
பஞ்ச பாண்டவர் கோயில்களை மிகக் குறைந்த பட்ஜெட்டில் சுற்றிப்பார்க்கும் வகையில் இந்த சுற்றுலா திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில், அர்முலாவில் உள்ள பார்த்தசாரதி கோயிலில் வழங்கப்படும் மிகச் சிறந்த வல்ல சதய என்ற விருந்து சடங்கில் பங்கேற்கவும் நல்வாய்ப்பு ஏற்படுத்தித் தரப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பல்வேறு கோயில் தேவஸ்தானங்களுடன் இணைந்து இந்த சுற்றுலா திட்டம் செயல்படுத்தப்படுகிறது. பாண்டவர்கள் ஐவரால் கட்டப்பட்டதாகக் கூறப்படும் ஐந்து கோயில்களை தரிசிக்க, சுற்றுலாப் பயணிகள் முன்கூட்டியே முன்பதிவு செய்யும் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
சாதாரண மக்களும் மேற்கொள்ளும் வகையில் இந்த சுற்றுலா திட்டம் கொண்டு வரப்பட்டிருப்பதால் பலரும் இதனை பயன்படுத்திக் கொள்வார்கள் என்றும், இதன் மூலம் வருவாய் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் போக்குவரத்துக் கழகம் நம்பிக்கைத் தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.