தேசியக் கொடியுடன் போராடிய இளைஞரைக் கொடூரமாக தாக்கிய மாவட்ட ஆட்சியர்!
பிகாரில் ஆசிரியர் பணி நியமனம் தாமதப்படுத்துவதற்கு எதிராக போராடிய இளைஞரை கூடுதல் மாவட்ட ஆட்சியர் கொடூரமாக தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாட்னாவில் நூற்றுக்கணக்கான இளைஞர்கள் பணி நியமனம் தாமதம் செய்வதற்கு எதிராக திங்கள்கிழமை போராட்டம் நடத்தினர். அப்போது போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக காவல்துறையினருடன் பாட்னா கூடுதல் மாவட்ட ஆட்சியர் கே.கே. சிங் சென்றுள்ளார்.
போராட்டக்காரர்களை கலைந்து செல்லும்படி காவல்துறையினர் அறிவுறுத்தியும் போராட்டத்தை தொடர்ந்ததால், தடியடி நடத்தவும், தண்ணீர் பீய்ச்சி கூட்டத்தை கலைக்கவும் கூடுதல் மாவட்ட ஆட்சியர் காவல்துறைக்கு உத்தரவிட்டார்.
தொடர்ந்து தேசியக் கொடியுடன் சாலையில் படுத்து போராட்டம் நடத்திய இளைஞர் ஒருவரை, தடியால் கொடூரமாக கூடுதல் மாவட்ட ஆட்சியர் தாக்கியுள்ளார்.
இதையும் படிக்க | அமித் ஷாவின் செருப்பை கையில் எடுத்த தெலங்கானா பாஜக தலைவர்
இந்த விடியோ சமூக ஊடகங்களில் வேகமாக பரவத் தொடங்கிய நிலையில், நிகழ்விடத்திற்கு வந்த பாட்னா மாவட்ட ஆட்சியர், உடனடியாக விசாரணைக் குழு ஒன்றை அமைத்தார்.
இதுகுறித்து துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் கூறியதாவது:
பாட்னாவில் போராட்டத்தை கட்டுப்படுத்தவே தடியடி நடத்தப்பட்டது. இளைஞரை கூடுதல் மாவட்ட ஆட்சியர் தாக்கியதை விசாரிக்க குழு அமைக்கப்பட்டுள்ளது. அவர்மீது தவறு இருக்கும் பட்சத்தில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
முன்னதாக, சுதந்திர நாள் விழாவின்போது பிகாரில் புதிதாக 20 லட்சம் வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும் என்று முதல்வர் நிதீஷ் குமார் அறிவித்திருந்தார்.