தெலங்கானாவில் உள் துறை அமைச்சர் அமித் ஷாவின் செருப்பை கையில் எடுத்துப் போட்ட மாநில தலைவரின் விடியோ இணையத்தில் பலரால் பகிரப்பட்டு விமர்சனத்திற்குள்ளாகியுள்ளது.
தெலங்கானா மாநிலத்திற்கு வந்த பாஜக மூத்த தலைவரும், உள் துறை அமைச்சருமான அமித் ஷா, செகந்திராபாத்திலுள்ள உஜ்ஜயினி மகாலட்சுமி கோயிலில் சாமி தரிசனம் செய்தார்.
அப்போது மாநில பாஜக தலைவர் பண்டி சஞ்சய் குமார் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர். கோயில் சாமி தரிசனம் செய்த பிறகு அமித் ஷாவுடன் சஞ்சய் குமாரும் வெளியே வந்தார்.
அப்போது வாசலிலிருந்து அமித் ஷாவை முந்திக்கொண்டு வேகமாக சென்ற சஞ்சய் குமார், அமித் ஷாவின் செருப்பை கைகளில் எடுத்து அவரின் கால்கள் அருகே வைத்தார்.
இந்த விடியோவை தெலங்கானா ராஷ்ட்ர சமிதி கட்சியின் தலைவரும் அமைச்சருமான கே.டி.ராமா ராவ் சுட்டுரையில் பகிர்ந்து விமர்சித்துள்ளார்.
சுட்டுரையில் தெலுங்கு மொழியில் அவர் பதிவிட்டுள்ளதாவது, தில்லி செருப்பை கைகளில் சுமந்த குஜராத் அடிமையை மக்கள் பார்த்துக்கொண்டுதான் உள்ளனர். இதன் மூலம் தெலங்கானாவின் சுயமரியாதையை அவர் இழிவுபடுத்தியுள்ளார். தெலங்கானாவின் சுயமரியாதையை இழிவுக்குள்ளாக்கியவர்களை அனைத்து தரப்பு மக்களும் புறக்கணிக்க வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார்.