குஜராத்தில் காங்கிரஸ் எம்எல்ஏ பரேஷ் தனானி சைக்கிளில் கேஸ் சிலிண்டருடன் வாக்களிக்க வந்தது மக்களிடையே பேசப்பட்டு வருகிறது.
182 சட்டப்பேரவைத் தொகுதிகளைக் கொண்ட குஜராத் சட்டப்பேரவைக்கான முதல் கட்டத் தேர்தல் 89 தொகுதிகளில் இன்று(டிச. 1) நடைபெறுகிறது. இன்று மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
முதல் கட்ட தோ்தலில், 70 பெண்கள் உள்பட மொத்தம் 788 வேட்பாளா்கள் களத்தில் உள்ளனா். வாக்காளா்கள் 2.39 கோடி பேர் உள்ளனர்.
குஜராத் சட்டப்பேரவைத் தோ்தலில் முதல் கட்டமாக வாக்குப்பதிவு பலத்த பாதுகாப்புடன் நடைபெற்று வருகின்றது.
இந்நிலையில், குஜராத்தின் அம்ரேலி சட்டப்பேரவைத் தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ பரேஷ் தனானி சைக்கிளில் வாக்களிக்க வந்தார். மேலும், சைக்கிளில் ஒரு சிலிண்டரையும் எடுத்து வந்தார்.
'சுயநலம் மற்றும் அச்சம் என்ற சுவர்களுக்கு இடையே குஜராத்தை அடிமையாக மாற்ற பாஜக சதி செய்தது. அரசின் தோல்வியால் பணவீக்கமும் வேலையின்மையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
ஒரு கேஸ் சிலிண்டரின் விலை ரூ. 1100 -க்கு மேல் உள்ளது. மின்சார கட்டணம், போக்குவரத்துக் கட்டணம் உயர்ந்துள்ளது. பெட்ரோல் விலை உயர்ந்துள்ளது. கல்வி தனியார்மயமாக்கப்படுகிறது. அரசுப் பள்ளிகள் மூடப்படுகின்றன. இதவுரை 3.5 லட்சத்திற்கும் அதிகமானோர் கரோனாவால் உயிரிழந்துள்ளனர். பாஜக அரசின் தோல்வியால் மக்களுக்கு மிகுந்த மன உளைச்சல் ஏற்பட்டுள்ளதாக நினைக்கிறேன். எனவே குஜராத்தில் ஆட்சி மாற்றம் தேவை. காங்கிரஸ் ஆட்சிக்கு வர வேண்டும். ஆட்சி மாற்றம் நிகழும் நேரம் இது' என்று பேசினார்.
குஜராத்தில் மீதமுள்ள 93 தொகுதிகளுக்கு இரண்டாம் மற்றும் இறுதிக்கட்ட தோ்தல் டிச. 5-ஆம் தேதி நடைபெறுகிறது.