குஜராத்தில் இன்று 50 கி.மீ. பேரணியாக செல்லும் மோடி!
குஜராத் இரண்டாம் கட்டத் தேர்தலையொட்டி பிரதமர் நரேந்திர மோடி 50 கிலோ மீட்டர் பேரணியாக சென்று வாக்கு சேகரிக்கவுள்ளார்.
குஜராத் சட்டப்பேரவைத் தோ்தலில் முதல் கட்ட வாக்குப்பதிவு 89 தொகுதிகளில் நடைபெற்று வரும் நிலையில், இரண்டாம் கட்டத் தேர்தலுக்கு டிசம்பர் 5ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.
இதற்கான இறுதிகட்ட பிரசாரத்தில் அரசியல் கட்சியினர் ஈடுபட்டு வருகின்றனர். பாஜக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து இரண்டு நாள்கள் இடைவெளியில் மீண்டும் இன்று குஜராத்திற்கு பிரசாரத்திற்காக பிரதமர் மோடி வருகை தரவுள்ளார்.
நரோதா காம் பகுதியில் பிரசாரத்தை தொடங்கும் மோடி, சாலை வழியாக பேரணி செல்கிறார். சுமார் 50 கி.மீ. பேரணியில் 16 தொகுதி மக்களை சந்தித்து வாக்கு சேகரிக்கிறார்.
மாலை 3.30 மணியளவில் தொடங்கும் பேரணி மாலை 6.30 மணியளவில் காந்தி நகர் தெற்கு தொகுதியில் நிறைவு பெறுகிறது. சுமார் 35 இடங்களில் வாகனத்தை நிறுத்தி வாக்கு சேகரிக்கவுள்ளார் மோடி.
இதையும் படிக்க | குஜராத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது!
பாஜக முதல்வர் வேட்பாளராக களமிறக்கப்பட்டு பூபேந்திர படேல் போட்டியிடும் காட்லோடியா தொகுதியிலும் பிரதமர் மோடி வாக்கு சேகரிக்கிறார்.
குஜராத் சட்டப்பேரவைத் தோ்தலில் முதல் கட்ட வாக்குப்பதிவு 19 மாவட்டங்களில் 89 தொகுதிகளில் நடைபெற்று வருகின்றது.
182 சட்டப்பேரவைத் தொகுதிகளைக் கொண்ட குஜராத் மாநிலத்தில் இரண்டாம் மற்றும் இறுதிக்கட்ட தோ்தல் மீதமுள்ள 93 தொகுதிகளுக்கு டிச. 5-ஆம் தேதி நடைபெறுகிறது. இதற்கான பிரசாரம் டிசம்பர் 3-ஆம் தேதியுடன் நிறைவுபெறுகிறது.