காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ நடைப்பயணத்தில் ஹிமாசல பிரதேசத்தின் முதல்வர் சுக்விந்தர் சிங் சுக்கு, எம்.எல்.ஏ.க்கள் கலந்து கொள்ளவுள்ளனர்.
தமிழகத்தின் கன்னியாகுமரி மாவட்டத்தில் செப்டம்பர் 7ஆம் தேதி தொடங்கிய பாரத் ஜோடோ(இந்திய ஒற்றுமை) நடைப்பயணம் கேரளம், ஆந்திரம், தெலங்கானா, மகாராஷ்டிரம், மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களைக் கடந்து 97வது நாளாக ராஜஸ்தானில் நடைபெற்று வருகின்றது.
இதையும் படிக்க | இந்திய - சீன வீரர்கள் மோதல்: நாடாளுமன்றத்தில் ராஜ்நாத் சிங் விளக்கம்
இந்த நடைப்பயணத்தில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, முன்னாள் தலைவர் சோனியா காந்தி, பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி, ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகெல், மாநில தலைவர்கள், கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள், நடிகர் - நடிகைகள் எனப் பல்வேறு தரப்பினர் பங்கேற்று ஆதரவு அளித்து வருகின்றனர்.
இந்நிலையில், ஹிமாசல் பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைத்து புதிய முதல்வராக சுக்விந்தர் சிங் சுக்கு ஞாயிற்றுக்கிழமை பதவியேற்ற நிலையில், வரும் டிசம்பர் 16ஆம் தேதி 100-வது நாள் நடைப்பயணத்தில் மாநிலத்தின் காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினர்களுடன் கலந்து கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராகுல் காந்தியின் நடைப்பயணம் மொத்தம் 150 நாள்கள் நடைபெறும் எனத் திட்டமிடப்பட்டுள்ள நிலையில், 100 நாள்களை கடந்து சாதனை படைக்கவுள்ளது.