குடிப்பவர்கள் இறப்பார்கள் எனக் கூறிய பிகார் முதல்வர் நிதீஷ் குமார் பேசியதைத் தாக்கிப் பேசும் விதமாக பாஜக தலைவர் சுஷில் குமார் மோடி பேசியுள்ளார்.
நாட்டில் கோடிக்கணக்கான மக்கள் குடிக்கிறார்கள் அவர்கள் அனைவரும் இறக்க வேண்டுமா எனவும் நிதீஷ் குமாரைத் தாக்கிப் பேசியுள்ளார்.
பிகாரின் சரண் மாவட்டத்தில் கள்ளச்சாராயம் குடித்த 21 பேர் உயிரிழந்தனர். இதனையடுத்து, பிகார் முதல்வர் நிதீஷ் குமார் மீது பலரும் குற்றம்சாட்டி வருகின்றனர். இந்த நிலையில், பாஜக தலைவர் சுஷில் குமார் இவ்வாறு குற்றம்சாட்டியுள்ளது கவனம் பெறுகிறது.
இது குறித்து சுஷில் குமார் மோடி கூறியதாவது: குடிப்பவர்கள் மிகப் பெரிய பாவம் செய்தவர்கள் எனவும், அவர்கள் இந்தியர்களாக இருக்க முடியாது எனவும் பிகார் முதல்வர் நிதீஷ் குமார் கூறியிருப்பது ஏற்புடையது அல்ல. ஒரு மாநிலத்தின் முதல்வர் இப்படிக் கூறலாமா? பிகாரில் கள்ளச்சாரயம் காய்ச்சுவதற்கு தடை இருக்கும்போது கள்ளச்சாரயம் குடித்து பலர் உயிரிழந்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது. பிகாரில் கள்ளச்சாரயம் மூலமாக மாநிலப் பொருளாதாரத்துக்கு இணையாக கள்ளச்சாரய பொருளாதாரம் உருவெடுத்துள்ளது. மாநிலத்தில் கள்ளச்சாரயத்தினை தடை செய்யும் பொறுப்பில் உள்ளவர்களின் பைகளுக்கு கோடிக்கணக்கான ரூபாய் செல்கிறது. கள்ளச்சாரயத்துக்கு மாநிலத்தில் தடை இருக்கும்போது அந்தத் தடை உத்தரவு சரியாக செயலில் உள்ளதா என்பதை உறுதி செய்வது அரசின் கடமை என்றார்.