3 மாதங்களில் 26.5 கோடி சைபர் தாக்குதல்கள்: கேள்விக்குள்ளாகும் இணையப் பாதுகாப்பு
நாட்டில் 3 மாதங்களில் 26.5 கோடி இணையக் கணக்குகள் சைபர் தாக்குதலுக்குள்ளாகியுள்ளதாக சமீபத்திய ஆய்வறிக்கையில் தெரிய வந்துள்ளது.
உலகம் முழுவதும் வளர்ந்துவரும் டிஜிட்டல் தொழில்நுட்பம் மனித வாழ்க்கையை முற்றிலும் மாற்றியுள்ளது. பல்வேறு வசதிகள் இதன்மூலம் ஏற்பட்டாலும் அதற்கு இணையாக பயனர்களின் மீதான தாக்குதல்களும் ஒருசேர அதிகரித்துள்ளன. இதனால் இணையப் பயனர்களின் தகவல் பாதுகாப்பை உறுதி செய்வது இன்றியமையாததாகிறது.
இந்நிலையில் இணையத் தொடர்பை பயன்படுத்தி நடக்கும் சைபர் குற்றங்கள் தொடர்பாக சர்ஃப்சார்க் நிறுவனம் நடத்திய தகவல் திருட்டு கண்காணிப்பு தொடர்பான ஆய்வறிக்கையின் முடிவு வெளியாகியுள்ளது.
அதில் நாட்டில் 2022 அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான காலத்தில் 26.5 கோடி பயனர்களின் இணையக் கணக்குகள் சைபர் தாக்குதலுக்குள்ளாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2004ஆம் ஆண்டு முதல் இதுவரை அமெரிக்காவில் 240 கோடி பயனர் இணையக் கணக்குகளும், ரஷியாவில் 220 கோடி பயனர் இணையக் கணக்குகளும் சைபர் தாக்குதலுக்குள்ளாகியுள்ளதாக அந்த அறிக்கை தெரிவித்துள்ளது.
அதிகளவு இணையத் தாக்குதலுக்குள்ளான நாடுகளின் முதல் 5 நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் இடம்பெற்றுள்ளதாக அந்த ஆய்வறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ள இந்த அறிக்கையானது இதே காலப்பகுதியில் இந்தியாவில் 14.3 கோடி இணையக் கடவுச்சொற்களும், 7.3 கோடி பயனர் பெயர்களும், 7.9 கோடி பயனர் அலைபேசி எண்களும் பொதுவெளியில் கசிந்துள்ளதாகத் தெரிவித்துள்ளது.
உலகளாவிய இணையத் தாக்குதல்களில் 29.7 சதவிகித தாக்குதல்கள் ஐரோப்பிய நாடுகளில் நடந்துள்ளன.