புது தில்லி: தில்லியின் மோகன் கார்டன் பகுதியில், 17 வயது மாணவி மீது ஆசிட் வீசப்பட்ட சம்பவத்தில், குற்றவாளி ஆன்லைன் மூலம் ஆசிட் வாங்கியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கில், மூன்று பேரை கைது செய்திருக்கும் காவல்துறையினர், அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிக்க.. மெரீனாவில் உள்ள காந்தி சிலையை இடமாற்றம் செய்ய தமிழக அரசு அனுமதி
ஆசிட் வீசிய இளைஞரும், அந்த மாணவியும் நண்பர்களாக இருந்துள்ளனர். அண்மையில் இருவருக்கும் சண்டை ஏற்பட்டு பிரிந்துவிட்ட நிலையில், மாணவி மீது ஆசிட் வீச்சில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சஃப்தர்ஜங் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் மாணவியின் முகத்தில் 8 சதவீத தீக்காயம் ஏற்பட்டுள்ளது. இரண்டு கண்களிலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதன் தாக்கம் எந்த அளவுக்கு ஏற்பட்டுள்ளது என்பதை கண் மருத்துவர் பரிசோதித்த பிறகே தெரிய வரும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதையும் படிக்க.. சீனத்துக்கு என்னதான் பிரச்னை?
அந்த மாணவி 12ஆம் வகுப்பு படித்து வந்த நிலையில், டிசம்பர் 18ஆம் தேதி நடைபெறவிருக்கும் சிஎல்ஏடி தேர்வுக்குத் தயாராகி வந்துள்ளார்.
புதன்கிழமை காலை 5.30 மணியளவில், சாலையோரம் நடந்து சென்று கொண்டிருந்த மாணவி மீது, பைக்கில் வந்த இளைஞர்களில் ஒருவர் ஆசிட்டை வீசியுள்ளார். இந்த சம்பவம் அங்கிருந்த சிசிடிவியில் பதிவாகியுள்ளது.