பிகாரில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தோர் எண்ணிக்கை 65 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 6 ஆண்டுகளில் பிகாரில் இது மிகவும் சோகமான சம்பவமாகப் பார்க்கப்படுகிறது.
பிகார் மாநிலம் சரண் மாவட்டத்தில் சாப்ரா பகுதியில் கடந்த திங்கள்கிழமை, செவ்வாய்க்கிழமைகளில் கள்ளச்சாராயம் அருந்தியவர்களுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்ட நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
முதலில் 5 பேர் உயிரிழந்த நிலையில் படிப்படியாக உயிரிழப்பு அதிகரித்து வருகிறது. உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை தற்போது 65 ஆக உயர்ந்துள்ளது.
இதுகுறித்து விசாரணை நடத்த அதிகாரிகள் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது. கள்ளச்சாராயம் விற்பனை செய்தது தொடர்பாக இதுவரை 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
முன்னதாக பிகாரில் கடந்த 2016ல் மது அருந்த, விற்பனை செய்ய நிதீஷ் குமார் அரசு தடை விதித்தது. இதன்பின்னர் கள்ளச்சாராயம் குடித்து பலியாவது அங்கு தொடர்கதையாக உள்ளது. எனினும் தற்போதைய சம்பவம் மிகவும் மோசமானதாக பார்க்கப்படுகிறது.
பிகாரில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழப்பது தொடர்ந்து நடந்தாலும் தற்போது உயிரிழப்பு அதிகரித்துள்ளதால் எதிர்க்கட்சிகள் இந்த விவகாரத்தை தீவிரமாக கையில் எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன. ஆனால், கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தோருக்கு கண்டிப்பாக இழப்பீடு வழங்கப்படமாட்டாது என்றும் கள்ளச்சாராயம் குடித்தால் உயிரிழக்கதான் நேரிடும் என்றும் நிதீஷ் குமார் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்க | போருக்கு தயாராகிறது சீனா: ராகுல் காந்தி