சிறுவன் வயிற்றில் ரிமோட் பேட்டரி! 20 நிமிடங்களில் அகற்றிய மருத்துவர்கள்
கேரளத்தில் 2 வயது சிறுவன் வயிற்றிலிருந்த ரிமோட் பேட்டரியை (மின்கலன்) 20 நிமிடங்களில் மருத்துவர்கள் அகற்றி, சிறுவனைக் காப்பாற்றியுள்ளனர்.
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் வீட்டில் விளையாடிக்கொண்டிருந்த ரிஷிகேஷ் என்ற 2 வயது சிறுவன் ரிமோட் பேட்டரியை விழுங்கியுள்ளான்.
இதனைத் தொடர்ந்து அருகிலுள்ள மருத்துவமனைக்கு சிறுவனை அவரின் பெற்றோர்கள் அழைத்துச்சென்றுள்ளனர். அங்கு மருத்துவர்களின் அறிவுரையின்படி, தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
அங்கு சிறுவனின் வயிற்றில் பேட்டரி சிக்கியுள்ளதை அறிந்த மருத்துவர்கள், இரைப்பை குடல் மருத்துவர்கள் குழுவினர் சேர்ந்து என்டோஸ்கோப்பி முறையைப் பயன்படுத்தி 20 நிமிடங்களில் சிறுவனின் வயிற்றிலிருந்த பேட்டரியை எடுத்துள்ளனர்.
இது தொடர்பாக பேசிய இரைப்பை குடல் மருத்துவர் ஜெயக்குமார், பெற்றோர்கள் தாமதிக்காமல் சிறுவனை மருத்துவமனைக்கு அழைத்து வந்தனர். உள்ளூர் மருத்துவர்கள் தெரிவித்த தகவலின்படி, சிறுவனின் வயிற்றிலிருந்த பேட்டரி எடுப்பதற்கான முயற்சிகளை உடனடியாகத் தொடங்கினோம்.
சிறுவனுக்கு மயக்க மருந்து கொடுத்து, 20 நிமிடங்களில் வயிற்றிலிருந்த பேட்டரியை நீக்கினோம். வேறு எந்த பகுதியில் பேட்டரி சிக்கியிருந்தாலும் சவாலாய் அமைந்திருக்கும். தற்போது சிறுவன் நலமுடன் இருக்கிறார் எனக் குறிப்பிட்டார்.
5 செ.மீ நீளமும், 1.5 செ.மீ அகலமும் உடைய பேட்டரிகள் ரிமோட்களுக்கு பயன்படுத்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.