‘கரோனா பாதிப்பு காரணமாக 2021-ஆம் ஆண்டு நடத்தத் திட்டமிடப்பட்டிருந்த மக்கள்தொகை கணக்கெடுப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது’ என்று மத்திய அரசு செவ்வாய்க்கிழமை தெரிவித்தது.
மக்களவையில் இதுதொடா்பான கேள்விக்கு மத்திய உள்துறை இணையமைச்சா் நித்யானந்த் ராய் செவ்வாய்க்கிழமை பதிலளிக்கையில், ‘மத்திய அரசு 2021-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்தத் திட்டமிட்டு, அதற்கான அறிவிக்கையை கடந்த 2019-ஆம் ஆண்டு மாா்ச் 28-ஆம் தேதி அரசிதழில் வெளியிட்டது. ஆனால், கரோனா பாதிப்பு காரணமாக, மக்கள்தொகை கணக்கெடுப்புப் பணிகள் அடுத்த உத்தரவு வரும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது’ என்றாா்.
மக்கள்தொகை கணக்கெடுப்பு தரவு மையத்தில் இணைய தாக்குதல் குறித்த கேள்விக்கு பதிலளித்த மத்திய அமைச்சா், ‘மக்கள்தொகை கணக்கெடுப்பு தரவுகளைப் பாதுகாக்க பன்னடுக்கு பாதுகாப்பு நடைமுறை அமல்படுத்தப்பட்டுள்ளது. தேசிய முக்கியத் தகவல் உள்கட்டமைப்பு பாதுகாப்பு மையம் மற்றும் இந்திய கணினி அவசரநிலை மீட்புக் குழு ஆகியவற்றின் ஆலோசனைகளின் அடிப்படையில் தரவு பாதுகாப்பு மையத்தில் பாதுகாப்பு நடைமுறை அமல்படுத்தப்பட்டுள்ளது’ என்றாா்.
மற்றொரு கேள்விக்கு பதிலளித்த அவா், ‘மக்கள்தொகை கணக்கெடுப்பு தரவு மையத்திலோ அல்லது மக்கள்தொகை கணக்கெடுப்பு ஆணையா் அலுவலக பேரிடா் மீட்பு வலைதளத்திலோ எந்தவித இணைய தாக்குதலோ அல்லது தரவு திருட்டு முயற்சியோ நடைபெறவில்லை’ என்றாா்.