ஒற்றுமை நடைப்பயணம் குறித்து அவதூறு பரப்பவும், நடைப்பயணத்தை கவிழ்க்கவும் கரோனா என்ற பெயரில் மத்திய அரசு நாடகமாடுவதாக காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் குற்றம் சாட்டியுள்ளார்.
காங்கிரஸ் அனைத்து விதமான கரோனா பாதுகாப்பு வழிகாட்டுதல்களையும் சரிவர கடைபிடிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
இதையும் படிக்க: சிஎஸ்கேவின் அடுத்த கேப்டன் பென் ஸ்டோக்ஸா?
ராகுல் காந்தி தலைமையிலான ஒற்றுமை நடைப்பயணம் ஹரியாணாவில் நடைபெற்று வருகிறது. இன்று ஹரியாணாவில் பயணத்தை முடித்துக் கொண்டு பின்னர் தில்லியில் நடைப்பயணம் தொடர உள்ளது. இன்றைய நடைப் பயணத்தில் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி மற்றும் விளையாட்டுத் துறை பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டனர்.
இந்த நிலையில் பத்திரிகையாளர்களை சந்தித்த காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் கூறியதாவது: கடந்த இரண்டு நாள்களாக காங்கிரஸின் ஒற்றுமை நடைப்பயணம் குறித்து அவதூறு பரப்புவதற்கும், நடைப்பயணத்தை கவிழ்க்கவும் மத்திய அரசு கரோனா பரவல் என்ற நாடகத்தை மத்திய அரசு அரங்கேற்றி வருகிறது. நடைப்பயணதை எப்படியாவது தடுத்து நிறுத்த வேண்டும் என்பதே அவர்களின் ஒரே குறிக்கோள். கரோனா குறித்து பாதுகாப்பு வழிமுறைகள் கடிதத்தை அனைவருக்கும் அனுப்பாமல் காங்கிரஸுக்கு மட்டும் அனுப்ப காரணம் என்ன? நாங்கள் பாதுகாப்பு வழிகாட்டுதல்களை சரிவர கடைபிடித்தே ஒற்றுமைப் பயணத்தை நடத்தி வருகிறோம்.
இதையும் படிக்க: ஐபிஎல் ஏலம் நேரலை: சிஎஸ்கேவுக்கு ஸ்டோக்ஸ், சாம் கரண் சாதனை!
நாங்கள் உங்களைப் போல் கரோனாவுக்கு எதிரானப் போரில் 18 நாள்களில் வெல்வோம் (மகாபாரத போரைப் போல) என்று கூறவில்லை. ஒரு மனிதர் நம்மை வீட்டின் பால்கனிக்கு சென்று தட்டுகளில் ஒலியினை ஏற்படுத்தச் சொன்னார். இவைதான் அவர்களால் கரோனாவைக் கட்டுப்படுத்தக் கூறப்பட்ட யோசனைகள். பிரதமர் முகக் கவசம் அணிந்திருந்த நேரத்தைக் காட்டிலும் நான் நேற்று (டிசம்பர் 23) அதிக நேரம் முகக் கவசம் அணிந்திருந்தேன் என்றார்.