பாஜகவை தனது குருவாக கருதுவதாக ராகுல்காந்தி தெரிவித்ததுடன் அதற்கான விளக்கத்தையும் முன்வைத்துள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், தற்போதைய மக்களவை உறுப்பினருமான ராகுல்காந்தி பாஜக அரசின் நடவடிக்கைகளைக் கண்டித்து இந்திய ஒற்றுமை நடைபயணத்தில் ஈடுபட்டுள்ளார்.
கடந்த செப்டம்பர் மாதம் தமிழ்நாட்டின் கன்னியாகுமரியில் தொடங்கிய இந்த நடைபயணம் கேரளம், கர்நாடகம், தெலங்கானா, மகாராஷ்டிரம், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், ஹரியாணா ஆகிய மாநிலங்களைக் கடந்து தற்போது தில்லியை அடைந்துள்ளது. இந்த நடைபயணம் அடுத்த மாதம் ஜம்மு-காஷ்மீரில் நிறைவடைகிறது.
இதையும் படிக்க | தில்லியில் பாதுகாப்புப் பணியில் 18 ஆயிரம் போலீஸார்!
இந்நிலையில் தில்லியில் அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு பேசிய ராகுல்காந்தி மத்திய பாஜக அரசை கடுமையாக விமர்சித்தார்.
அப்போது பேசிய அவர், “பாஜகவை எனது குருவாக கருதுகிறேன். அவர்களிடமிருந்துதான் நான் எதையெல்லாம் செய்யக்கூடாது என்பதைக் கற்றுக் கொண்டேன். நான் ஒரு தியாகியின் குடும்பத்தைச் சேர்ந்தவன். நாட்டின் எல்லையில் நிற்கும் ஒவ்வொரு ராணுவ வீரரையும் நான் மதிக்கிறேன். அவர்கள் தங்களது இன்னுயிரை இழந்து தியாகிகளாக மாறிவிடக்கூடாத சூழலை உருவாக்க விரும்புகிறேன்.
இதையும் படிக்க | 2022-ல் மோடி அளித்த வாக்குறுதிகள்! கேலி செய்த பிரஷாந்த் பூஷண்
அரசுக்கும் ராணுவத்துக்கும் வித்தியாசம் உள்ளது. அரசாங்கம் எல்லைப் பாதுகாப்பில் தவறான முடிவை எடுத்துள்ளது. அவர்கள் இராணுவத்தின் பின்னால் ஒளிந்து கொள்ளக்கூடாது. தவறு நடந்துள்ளது என்பதை அரசு ஏற்றுக் கொண்டு அதை சரி செய்ய வேண்டும். இதற்காக ஒட்டுமொத்த எதிர்க்கட்சியும் அரசுடன் துணை நிற்கும்” எனத் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், “நான் நடைபயணத்தில் ஈடுபட்டுள்ளேன். எப்படி காருக்குள் அமர்ந்து யாத்திரையை செய்ய முடியும்? பிரதமர் மோடி காரிலிருந்து வெளிவந்து கையசைக்கும்போது கண்டுகொள்ளாத அரசு நான் யாத்திரை சென்றால் என்மீது வழக்குப் பதிவு செய்கிறது” என விமர்சித்தார்.