தில்லியில் பாதுகாப்புப் பணியில் 18 ஆயிரம் போலீஸார்!
தலைநகர் தில்லியில் புத்தாண்டு கொண்டாட்டங்களின்போது எந்தவிதமான விதிமீறல்களும் இல்லாத வகையில் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் தேசிய தலைநகர் முழுவதும் மாவட்ட மற்றும் போக்குவரத்து பிரிவுகளில் இருந்து 18 ஆயிரம் பணியாளர்களை தில்லி காவல்துறை நியமித்துள்ளது.
இதுகுறித்து சிறப்பு காவல் ஆணையர் தேபேந்திர பதக் கூறுகையில்,
புத்தாண்டு கொண்டாட்டங்களை முன்னிட்டு போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளோம். சனிக்கிழமை முதல் 16,500 பணியாளர்கள் நகரம் முழுவதும் பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள்.
சனிக்கிழமை இரவு 8 மணி முதல் கொனாட் பிளேஸில் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. அங்கீகரிக்கப்பட்ட வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்படும்.
குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இதைக் கண்காணிக்கும் வகையில் 125 இடங்களில் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்களை சரிபார்க்க அல்கோமீட்டர்கள் பயன்படுத்தப்படும் என்று தெரிவித்தனர். குறைந்த வயதுடையோர் வாகனம் ஓட்டுதல், கார் கண்ணாடிகளில் கருப்பு படம் போன்றவற்றுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க நடமாடும் குழுக்கள் அமைக்கப்படும்.
இந்த முறை, அதிக மக்கள் நடமாட்டம் உள்ள பகுதிகளில் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். உள்ளூர் போலீஸார், சிறப்புப் பிரிவுடன் ஒருங்கிணைந்து நிலைமையைக் கண்காணிக்கும்.
தில்லியில் உள்ள மக்கள் புத்தாண்டை சிறப்பாகக் கொண்டாட வேண்டும் என்பதே எங்கள் நோக்கமாகும். பெண்களின் பாதுகாப்பு கருதி நகரத்தில் 2,500க்கும் மேற்பட்ட பெண்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள்.
சோதனைக்காக 1,200க்கும் மேற்பட்ட நடமாடும் ரோந்து வாகனங்கள் மற்றும் 2,074 இருசக்கர வாகனங்கள் சேவையில் ஈடுபடுத்தப்படும். “போக்குவரத்து காவல்துறையைச் சேர்ந்த சுமார் 1,850 பணியாளர்கள் உள்ளூர் காவல்துறை ஊழியர்களுடன் கூட்டுச் சோதனைக்காக ஈடுபடுத்தப்படுவார்கள்.
அதிக மக்கள் நடமாட்டம் மற்றும் பாதிக்கப்படக்கூடிய பகுதிகளில் அதிக கவனம் செலுத்தப்படும். சட்டத்தை மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். கரோனா தொடர்பான அரசாங்க வழிகாட்டுதல்கள் கண்டிப்பாகப் பின்பற்றப்படும் என்றும் அவர் கூறினார்.
இந்தியா கேட் மற்றும் அதைச் சுற்றியுள்ள பாதசாரிகள் மற்றும் வாகனங்களின் போக்குவரத்தை ஒழுங்குபடுத்துவதற்காக தில்லி போக்குவரத்து காவல்துறை விரிவான போக்குவரத்து ஏற்பாடுகளை செய்துள்ளது. இந்தியா கேட்டில் பார்க்கிங் இடம் பற்றாக்குறையாக இருப்பதால், பார்வையாளர்கள் பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்த அறிவுறுத்தப்படுகிறார்கள்.
தில்லி உயிரியல் பூங்காவில் அதிக அளவில் மக்கள் கூடுவார்கள் என்பதால் மதுரா சாலையில் நெரிசல் ஏற்படுவதால், ஹஸ்ரத் நிஜாமுதீன் மற்றும் பிரகதி மைதானம் இடையே பைரோன் சாலை/மதுரா சாலையை மக்கள் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.