ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள் 2023 (மேஷம் - கன்னி)

2023 ஆங்கிலப் புத்தாண்டு பலன்களை தினமணி ஜோதிடர்பெருங்குளம் ராமகிருஷ்ணன் கணித்து வழங்கியுள்ளார். (மேஷம் முதல் கன்னி வரை)
ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள் 2023 (மேஷம் - கன்னி)

2023 ஆங்கிலப் புத்தாண்டு பலன்களை தினமணி ஜோதிடர்பெருங்குளம் ராமகிருஷ்ணன் கணித்து வழங்கியுள்ளார். (மேஷம் முதல் கன்னி வரை)

மேஷம் (அசுவினி, பரணி, கார்த்திகை முதல் பாதம் முடிய)

உங்களுக்கு இந்த ஆண்டு வீடு மனை வாங்கும் யோகம் உண்டாகும். பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் காணப்படும். கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்தி உங்கள் திறமையை வெளிக்கொண்டு வருவீர்கள். உங்களின் திறமையை அனைவரும் பாராட்டுவார்கள். நீங்கள் செய்யும் வேலையில் புதிய நுட்பங்களை பயன்படுத்தி அதன்மூலம் பாராட்டுகளை பெறுவீர்கள். உடல்நலனில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். முடிவுகள் தெளிவாக இருக்கும். செய்யும் செயலில் வேகம் அதிகரிக்கும். குடும்பத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் தீர்ந்து சந்தோஷமான சூழ்நிலை உருவாகும். சந்தான பாக்கியம் இந்த வருடம் கண்டிப்பாக கிடைக்கும்.

உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் சாதகமான போக்கு காணப்படும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்திருந்த இடமாற்றம் மற்றும் பதவி உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. உடன் பணி புரிபவர்கள் உங்களுக்கு அதிக ஒத்துழைப்பு கொடுப்பார்கள். மேலதிகாரிகளும் உங்களுக்கு சாதகமாகவே நடந்து கொள்வார்கள்.

தொழிலில் மேன்மை உண்டாகும். தனலாபம் உயரவும் வாய்ப்புண்டு. வியாபாரிகள் கணிசமான லாபம் பெற இயலும். மகசூல், கொடுக்கல் - வாங்கல் போன்றவற்றில் குறை உண்டாகாது. அதிகச் செலவுக்கு இடமுண்டு. ஆனால் அதனை சாமர்த்தியமாக சமாளிக்க வழி உண்டாகும். 

அரசியல்வாதிகளுக்கு, ஒரு முக்கியப் பிரச்சினையில் புத்திசாலித்தனமாக முடிவெடுக்க வேண்டிய கட்டம் உருவாகலாம். அரசாங்க காரியங்களில் எந்த ஆதாயத்தையும் முயற்சி செய்து பெறலாம். 

கலைத்துறை சம்பந்தப்பட்ட பணிகள் செவ்வனே நிறைவேறத்தடையில்லை. பொதுவாக அந்தஸ்து சிறப்பாக இருக்கும். பொருளாதார சுபிட்சம் நன்றாக இருக்கும். 

பெண்களுக்கு உங்களுடைய வாழ்வு உன்னதமாக அமைய இந்த காலகட்டம் உதவும். குடும்பத்தில் திருமணம் போன்ற நற்காரியங்களும் நடக்க இடமுண்டு. 

மாணவர்கள் புகழுடன் பொருளும் பெறுவர்.  வித்தைகளில் தேர்ச்சி உண்டாகும். தொலைதூரச் செய்தி நற்செய்தியாக இருக்கும்.

அஸ்வினி:

இந்த ஆண்டு தகுதிவாய்ந்தவர்கள் பதவி உயர்வு பெற வாய்ப்புண்டு. புதிய முயற்சிகளில் ஈடுபட வேண்டாம். உங்கள் பணி சரிவர இருந்து வரும். அன்றாட காரியங்கள் செவ்வனே நடைபெறும். கற்றறிந்த மேலோருக்குக் குறை ஏதும் உண்டாகாது. உங்களுடைய உயர்ந்த குணத்தால் அந்தஸ்து சிறப்பாக அமையும். தேவையில்லாமல் மனதை குழப்பிக்கொள்ள வேண்டாம். திருமணம் போன்ற நற்காரியங்களும் நடக்க வாய்ப்புண்டு. பெரியோர் நல்லாசியை விரும்பிப்பெறுங்கள். சத்ருவினால் ஓரிரு சங்கடங்கள் உருவாகலாம். உடல் நலமும் சற்று பாதிக்கப்படலாம். 

பரணி:

இந்த ஆண்டு வியபாரிகளுக்கு அளவான லாபம் நிச்சயம் உண்டு. பொருளாதார சுபிட்சம் குறைவுபடாது. பெரிய நிறுவன நிர்வாகிகளுக்கும் தொழிலாளர்களுக்கும் ஒரு பிரச்சினை குறித்து சற்று மனத்தாங்கல் ஏற்படலாம். எனினும் அது தானாகவே சரியாகிவிடும். எந்தவிதமான குறுக்கு வழியிலும் நிலைமையைச் சமாளிக்க முயலாதீர்கள். பெரியோர் ஆலோசனையைக் கேட்டு நடந்து கொள்வது அவசியம். அன்றாடப் பிரச்சினைகள் தடங்கலின்றி நிறைவேற வாய்ப்பு கிடைக்கும். திட்டமிட்டு செலவு செய்தால் பணக்கஷ்டத்தைத் தவிர்க்கலாம். 

கிருத்திகை 1ம் பாதம்:

இந்த ஆண்டு சங்கடங்கள் சற்றுமட்டுப்பட வாய்ப்புண்டு. பொருளாதார சுபிட்சம் பாதிக்கப்படாது. அன்றாட வாழ்வு நலமுடன் நிகழத்தடையிருக்காது. தொழிலிலோ, வியாபாரத்திலோ புது முயற்சிகளில் ஈடுபட வேண்டாம். வியாபாரிகளுக்குப் ஏதேனும் வில்லங்கம் ஏற்படலாம். கவனமுடன் இருப்பது அவசியம். உடல் நலம் பாதிக்கப்படாமல் இருக்கும். உத்தியோகத்தில் உள்ளோர் மிக்கப் பொறுப்புடன் பணியாற்ற வேண்டிய நேரம் இது. இல்லையேல் பழிச்சொல் வர நேரலாம். பெரியோர் சகவாசத்தை விரும்பிப்பெறுங்கள். தெய்வப்பணி, தருமப்பணிகளில் ஈடுபட்டுவாருங்கள். தொல்லை குறையும். 

பரிகாரம்:

முடிந்த வரை செவ்வாய்கிழமை தோறும் அருகிலிருக்கும் முருகன் கோவிலுக்குச் சென்று வலம் வரவும்.

ரிஷபம் (கார்த்திகை 2-ம் பாதம் முதல் ரோகிணி, மிருகசீரிஷம் 2-ம் பாதம் முடிய) 

உங்களுக்கு இந்த் ஆண்டு புதிய முயற்சிகள் எதிர்பார்த்தபடி நடக்கும். கவலை வேண்டாம். கற்றறிந்த மேலோர் கௌரவிக்கப்படுவர். தாயாரின் நலத்தில் கவனம் செலுத்த வேண்டிய நிலை உண்டாகும். பொதுவாக எவ்வளவு தான் சங்கடங்கள் ஏற்படுமானாலும் உங்கள் அந்தஸ்துக்கும் குந்தகம் ஏற்படாது. எந்தச்சங்கடங்களையும் சமாளிக்கும் ஆற்றலுக்கும் பஞ்சமிராது. பணக்கஷ்டம் உருவாக இடமில்லை. ஆனால், சிலர் விஷயத்தில் மனக்கஷ்டம் உருவாக இடமுண்டு. எனவே கவனமுடன் பேசுவது அவசியம். திடீர்ப் பொருள் வரவுக்கு   வாய்ப்புண்டு. தெய்வபலம் சிறப்பாக இருப்பதால் எல்லாமே சீராக அமைய வாய்ப்புண்டு.  பிள்ளைகள் நலனில் கவனம் செலுத்த வேண்டியது அவசியம். 

உத்தியோகஸ்தர்களுக்கு பணி நிரந்தரம் கிடைக்கவும் இடமுண்டு. வேலை இல்லாதோருக்கு அதற்கான வேளை கனிந்துவரும். திடீர்ப் பொருள் வரவுக்கும் வாய்ப்புண்டு. அதே போல் திடீர்ச் செலவுக்கும் இடமுண்டு. 

வியாபாரிகளுக்கு அலைச்சல் தவிர்க்க முடியாமற் போகலாம். நல்ல லாபம் பெறுவதற்கு அரும்பாடு படவேண்டியிருக்கும். இதனால் அதிருப்தி ஏற்படலாம். கவலை வேண்டாம். உங்களின் விடா முயற்சியால் நீங்கள் உங்கள் வெற்றியை அடைவீர்கள். புதிய வாடிக்கையாளர்களும் கிடைப்பார்கள். இதனால் உங்கள் தொழில் விரிவடையும்.

அரசியல்வாதிகளுக்கு முன்விரோதம் காரணமாக சிறு தொந்தரவுகள் உண்டாகவும் இடமுண்டு. அரசாங்க விரோதம் ஏற்படாமல் பார்த்துக் கொள்வதும் அவசியம். நேர்மையாகவும், கவனமுடனும் நடந்து கொள்வதன் மூலம் இந்த பிரச்சனைகளைத் தவிர்க்கலாம்.

கலைத்துறை சுறுசுறுப்படையும். தினசரி பணிகளை மட்டும் செய்து வாருங்கள். அன்றாட வாழ்வு நலம் பாதிக்காது. பிரச்சினை ஏதும் உருவாக இடமில்லை. ஓரிரு நன்மைகள் உண்டாக வழியுண்டு. மற்றப்படிக்குப் பலவிதமான சங்கடங்களை எதிர்நோக்க வேண்டிய காலம் இது. 

பெண்கள் 'தானுண்டு, தன் வேலை உண்டு' என்றிருப்பது அவசியம். தாயாரின் நலனில் அக்கறைச் செலுத்தவேண்டியது அவசியம். தங்களுடைய நற்பெயரைக் காத்துக் கொள்வதில் மிக்க கவனமாக இருக்கவேண்டும். இல்லையேல் பழிச் சொல்லுக்கு ஆளாகவேண்டிய நிலை உண்டாகலாம். 
மாணவர்கள் கல்விப்பயனைச் சீராகப்பெறத் தடையில்லை. பொறியியல் துறை, விவசாயத்துறை போன்றவற்றில் புதிய முயற்சிகள் இப்போது கைகொடுக்கும். 

கிருத்திகை 2, 3, 4 ம்பாதங்கள்: 

இந்த ஆண்டு உங்களுடைய வேலைகள் தடங்கலின்றி நடக்க வாய்ப்புண்டு. முதலாளி-தொழிலாளி உறவு சலசலப்புக்குள்ளாகலாம். விவசாயிகளுக்கு கஷ்டம் ஏதும் உருவாகாது. பயணத்தைத் தவிர்ப்பது நல்லது. விவசாயிகளுக்கும், தொழிலாளர்களுக்கும் சிறு சிறு கஷ்டங்கள் எந்த உருவிலாவது வரலாம். சமாளித்து விடுவீர்கள். கவலை வேண்டாம்.  கற்றறிந்த மேலோருக்கு உரிய கௌரவம் கிடைக்கத் தடையிருக்காது. காதல் விவகாரம் தற்போது வேண்டாம். பயணத்தைத் தவிர்ப்பது நல்லது. கடிதப்போக்கு வரத்தில் கண்ணியம் காப்பது அவசியம். 

ரோகினி:

இந்த ஆண்டு பல கஷ்டங்களும் உண்டாகும். ஆனால் இந்த கஷ்டங்களை குரு அருளால் நீங்கள் இலகுவாக சமாளிக்கவும் இயலும். கொடுக்கல் - வாங்கலில் நிதானம் இருக்கட்டும். விவசாயிகளுக்கு முன் விரோதம் காரணமாக ஒரு வழக்கு ஏற்படலாம். இதனைச் சமாதான முறையில் தீர்த்துக் கொள்ள முயலுங்கள். வியாபாரிகளுக்கு அளவான லாபம் உண்டு. பொறியியல், விஞ்ஞானம் கணிதம் போன்ற துறைகளில் உள்ளோருக்கு உற்சாகம் தரக்கூடிய நேரமாக இருக்கும். கலைத்துறையில் சாதகமான போக்கு காணப்படும். இயந்திரத் தொழிலில் சம்பந்தமுடையோர் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. 

மிருகசீரிஷம் 1, 2 ம் பாதங்கள்:

இந்த ஆண்டு கலைத்துறைச் சம்பந்தப்பட்ட பணிகளில் அவ்வப்போது சிறுசிறு தடங்கல்கள் ஏற்பட்டு பிறகு சீரடைய வாய்ப்புண்டு. பொருளாதார சங்கடம் இருக்காது. இயந்திரப் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு ஏற்றம் ஏற்படும். காவல்-ராணுவத்தினருக்கு ஆதாயம் உண்டு. நண்பர்கள் நல்லவர்களை இனம்கண்டு பழகினால் தொல்லை இராது. விவசாயிகளுக்கு மகிழ்ச்சியான சூழ்நிலை அமையும். கலைத்துறையில் கலகலப்பான சூழ்நிலை உருவாகுமானாலும் சங்கடங்களும் இருந்து வரும். பொதுவாக பணக்கஷ்டம் அந்தஸ்துக் குறைவு போன்றவை ஏற்படாது. குடும்பத்தில் லஷ்மிகரம் நிலைத்திருக்கும். 

பரிகாரம்: முடிந்த வரை வெள்ளிக்கிழமை தோறும் அருகிலிருக்கும் பெருமாள் கோவிலுக்குச் சென்று 11 முறை வலம் வரவும்.

******

மிதுனம் (மிருகசீரிஷம் 3,4-ஆம் பாதங்கள், திருவாதிரை, புனர்பூசம் 1,2,3-ஆம் பாதங்கள்)

உங்களுக்கு இந்த ஆண்டு நன்மையும் தீமையும் கலந்தவாறு நடக்கவே வாய்ப்புண்டு. குறிப்பாக நன்மைகளில் திடீர்ப் பொருள் வரவுக்கு இடமுண்டு. தீமைகளில் நண்பர் ஒருவர் விரோதி ஆகலாம். பொதுவாக சுபிட்சம் உண்டு. தொழில் சிறப்படையும், நிலபுலன்கள் விஷயத்தில் ஆதாயம் காணலாம். தெய்வ பலம் நல்லவிதமாக அமைந்துள்ள இந்த நேரத்தில் தெய்வப்பணி, தருமப்பணி போன்ற சத்காரியங்களில் ஈடுபட்டு மனம் மகிழ வாய்ப்புண்டு. குடும்பத்தில் சந்தோஷமான சூழல் இருக்கும். உறவினர்கள் வருகையும் இருக்கும். சுப காரியங்கள் நன்றாக நடக்க வாய்ப்புகள் அதிகம் உண்டு. பிள்ளைகள் உங்கள் சொல்படி நடந்து கொள்வார்கள்.

உத்தியோகஸ்தர்களுக்குப் பதவி உயர்வு உண்டாகலாம். மேலதிகாரிகளின் உள்ளம் குளிர நடந்து கொண்டால் தீமை குறையும். உழைப்பாளிகளுக்கு உரிய கௌரவம் கிட்டும். 

வியாபாரிகளுக்கு நல்ல லாபம் வரும். விவசாயிகளுக்கு உற்சாக நிலை உண்டு. உபத்திரவம் ஏதும் உண்டாகாது. தொழிலில் மேன்மை உண்டாகும். தொழிலாளர்களுக்கும் ஆதாயமான சூழ்நிலை உருவாகும். விவசாயிகளுக்கு மகசூல் மகிழச்சி தரும். 

அரசியல்வாதிகள் அவசரப்படாமல் நடந்து கொள்வது நல்லது. வேண்டிய நண்பர் ஒருவர் மனஸ்தாபத்துக்கு உள்ளாக நேரலாம். பெருந்தன்மையோடு நடந்து கொண்டு அந்தப் பிரச்சினையைச் சமாளிக்க வேண்டியது அவசியம். 
கலைத்துறையில் சீரான போக்குக்குத் தடை உண்டாகாது. எந்தப் புது முயற்சியும் வெற்றியை நோக்கியே செல்லும். அன்றாட பணிகளை மட்டும் சிரத்தையோடு செய்து வாருங்கள். அன்றாட வாழ்க்கையின் தேவைகள் பூர்த்தியாகத் தடையிராது. 

பெண்கள் எதிலும் எச்சரிக்கையாக நடந்து கொள்வது அவசியம். வரவு அறிந்து செலவு செய்தால் பணக்கஷ்டம் உண்டாக வாய்ப்பில்லை. அன்றாடப் பணிகளில் குந்தகம் விளையாது ஓர் அமைப்பு காக்கும்.  

மாணவர்களில் பொறியியல், விஞ்ஞானம், கணிதம் போன்ற துறைகளில் உள்ளோருக்குப் புதிய சாதனைக்கான முயற்சிகள் கைகூடிவரும். கல்விப்பயனை மிகுந்த பிரயாசைப்பட்டேனும் பெற்று விடுவர். பயணத்தைத் தவிர்ப்பது நல்லது. காதல் விவகாரங்களில் தலையிட வேண்டாம்.

மிருகசீரிஷம் 3, 4 பாதங்கள்:

இந்த ஆண்டு வியாபாரிகளுக்கு அளவான லாபம் உண்டு.  தொழிலில் மந்த நிலை இருந்தாலும் அதை சமாளித்து விடுவீர்கள். விவசாயிகளுக்கு போதிய வருமானம் கிடைக்கும். கொடுக்கல் வாங்கலில் இருந்த சிக்கல் சரியாகும். பொருளாதாரத்தில் தொல்லை ஏற்படாது. பணக் கஷ்டம் வராமல் இருக்கும். கலைத்துறையில் உள்ளவர்களுக்கு அன்றாட பணிகள் சரிவர நடக்கும். தெய்வ வழிபாடு மனத்துக்குத் தெம்பு தரும்.  அரசு உத்தியோகஸ்தர்கள் விரும்பத்தக்க உத்தரவுகளைப் பெறலாம். அரசாங்க காரியங்களில் தாமதம் தவிர்க்க முடியாமற் போகலாம். 

திருவாதிரை:

இந்த ஆண்டு உடல் நலம் சிறிது பாதிக்கப்படலாம். தேவையில்லாத உணவுகளைத் தவிர்ப்பது நல்லது. தங்கள் நற்பெயரைக் காத்துக் கொள்வதில் மிக்க கவனமாக இருப்பது அவசியம். குடும்பத்தில் சுபிட்சம் இருக்கும். நற்பலன்கள் அதிகளவில் நடக்கும் என்றாலும், சிறிதளவு மனசங்கடங்கள் உண்டாக வாய்ப்புண்டு. பொருளாதாரக் குறை உண்டாகாது. அந்தஸ்து பாதிக்கப்படாது. குடும்பத்தில் சுபகாரியம் நடக்கலாம். வேலை இல்லாதோருக்கு வேலை கிடைக்க வாய்ப்பு உண்டு.

புனர்பூசம் 1, 2, 3 பாதங்கள்:

இந்த ஆண்டு உங்களுடைய வாழ்வில் சில நற்பலன்கள் ஏற்பட்டே தீரும். அந்த நன்மைகளை நேர்வழியில் சென்றே உங்களால் பெறமுடியுமாதலால் குறுக்கு வழியில் முயற்சிக்கும் எண்ணத்தைக் கைவிடுங்கள். பொருளாதார நிலை பாதிக்கப்படாது. வியாபாரிகளுக்கு ஒரு சறுக்கல் ஏற்படுமானாலும் நிமிர்ந்து விடுவார்கள். விவசாயிகளுக்கு உன்னதமான நேரம் இல்லை என்றாலும் உபத்திரவம் பெரிதாக உருவாகாது. கலைத்துறையில் உள்ளவர்களுக்கு உற்சாகம் உண்டாகும். 

பரிகாரம்:

முடிந்த வரை புதன்கிழமை தோறும் அருகிலிருக்கும் பெருமாள் கோவிலுக்குச் சென்று 11 முறை வலம் வரவும்.

******

கடகம் (புனர்பூசம் 4 - ஆம் பாதம், பூசம், ஆயில்யம்)

உங்களுக்கு கடக ராசி அன்பர்களே இந்த ஆண்டு குடும்ப சுபிட்சம், மக்கள், நலம், தாம்பத்திய உறவு எல்லாமே நலமாக இருக்கும். உங்களுடைய அந்தஸ்தும் சிறப்பாக இருக்கத் தடை இருக்காது. உங்கள் முயற்சிகளை எப்போதும் நேர்வழியில் செலுத்துங்கள். குறுக்கு வழியில் பிரவேசிக்காதீர்கள். குடும்ப நலம் சீராக இருக்கும்.  மனக்கிலேசம், உடல் நலம் பாதிப்பு, பண விரயம் போன்ற சங்கடங்கள் ஏற்படவும் ஓர் அமைப்பு முனைந்து நிற்பதால் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. தெய்வப்பணி, தருமப்பணி போன்ற நற்காரியங்கள் நலம் தரும்.  

உத்தியோகஸ்தர்களுக்கு ஏதேனும் ஒரு குறை உண்டாகலாம். எனினும் அன்றாட பணிகள் சரிவர நடக்கும். அளவான வருமானம் வர தடை இருக்காது. முன்விரோதம் காரணமாக ஒரு சிக்கல் ஏற்படலாம். அதையும் சமாளித்து வெற்றி காண்பீர்கள்.

வியாபாரிகளுக்கு சிறிதளவு பாதிப்பு ஏற்படலாம். விவசாயிகளுக்கு வீண் பிரச்சினை ஒன்று உருவாகலாம். காவல், ராணுவம் போன்ற துறைகளில் உள்ளோர் மிக்க பொறுப்புடன் பணியாற்றி நற்பெயரைக் காத்துக் கொள்வது அவசியம். 

அரசியல்வாதிகள் அவசரப் பட்டு எந்த முடிவுக்கும் வரத் தூண்டப்படுவார்கள். நிதானம் தேவை. எந்த பிரச்சனையையும் குறுக்கு வழியில் தீர்த்துக் கொள்ள முயற்சி செய்யாதீர்கள். நேர் வழியே நலம் பயக்கும். பொருளாதார நிலையைப் பொறுத்தமட்டில் வரவும் உண்டு; செலவும் உண்டு. செலவில் சில விரயமானதாகவும் இருக்கக் கூடும்.  

கலைத்துறையினருக்கு நன்மை தீமைகள் கலந்தவாறு நடக்க இடமுண்டு. பொதுவாக பொருளாதார சங்கடம் உருவாகாது. ஆனால், அதிகப்படியான செலவு உண்டாகலாம். டெக்னீஷியன்களுக்கு கௌரவம் கிடைப்பதுடன் பணவரவு உண்டாகவும் வாய்ப்புண்டு. 

பெண்களுக்கு குடும்ப நலம் அளவோடு இருக்கும். தாம்பத்தியம் மகிழ்ச்சியுடன் விளங்கும். சிறு தொல்லைகள் இருந்தாலும் மன தைரியத்தால் அவை அனைத்தையும் வென்றுவிடுவீர்கள்.

மாணவர்கள் பொறியியல்துறை, மருத்துவத் துறையிலுள்ளோருக்குப் புகழ் பெற சந்தர்ப்பமுண்டு. உங்கள் வாழ்வில் உன்னத நிலை அடைவதற்குத் தேவையான அடிப்படை இந்த காலகட்டத்தில் அமையும்.

புனர்பூசம் 4ம் பாதம்: 

இந்த ஆண்டு இயந்திரப் பணி சம்பந்தப்பட்ட தொழில், வியாபாரம் ஓரளவுக்கு உற்சாகம் தரும்படி அமையும். வியாபாரிகளுக்கு அளவான லாபம் வரத் தடை உருவாகாது. விவசாயிகளுக்கு பிரச்சனைகள் அதிகமில்லை. பணிகள் சரிவர நடக்கும். கலைத்துறை பாதிக்கப்படாது. எழுத்தாளர்களுக்கு பிரச்சினை இராது. இந்த நேரத்தில் தெய்வ வழிபாடு புரிந்து வருவது நல்லது.  

பூசம்:

இந்த ஆண்டு கலைத்துறை சிறப்படையும். மக்கள் நலம் நல்லவிதமாக இருக்கும். திருமண முயற்சிகள் கூடிவரும்.  வியாபாரிகள் கவனக் குறைவால் எந்தத் தவறையும் செய்யாதிருப்பதில் எச்சரிக்கையாக இருப்பது அவசியம். விவசாயிகளுக்கு தேவையான பண வரவு இருக்கும். கலைத்துறை சிறப்படையும். தெய்வப்பணிகளில் தங்களை ஈடுபடுத்திக் கொள்வதன் மூலம் மன அமைதி அடையும். 

ஆயில்யம்:

இந்த ஆண்டு ஏற்படும் தொல்லைகளில் இருந்து நன்மைகள் உண்டாகும். நிறைய விஷயங்களைக் கற்றுக் கொள்வீர்கள். வியாபாரிகளுக்கு பாதகமில்லை. தொழிலாளர்கள் எச்சரிக்கையாகப் பணியாற்றுவது அவசியம். மனக்கவலை இருக்கும். அரசு உத்தியோகஸ்தர்களுக்கு சிறு சோதனை உண்டாகலாம். தாம்பத்தியம் மகிழ்ச்சியுடன் விளங்கும்.  அரசு அலுவலர்களுக்கு பணிகளில் போதிய திருப்தி கிடைக்கும்.

பரிகாரம்: திங்கட்கிழமை தோறும் அருகிலிருக்கும் அம்மன் கோவிலுக்குச் சென்று 16 முறை வலம் வரவும்.

******

சிம்மம் (மகம், பூரம், உத்திரம் 1- ஆம் பாதம்)

உங்களுக்கு இந்த ஆண்டில் புதுமுயற்சிகளில் ஈடுபடும் வாய்ப்பு கிடைக்கும். வழக்குகளில் வெற்றி முகம் காண்பதற்குரிய சூழ்நிலையும் கனிந்து வரும். பொருளாதார சுபிட்சம் உண்டு. திருமணம் போன்ற சுபகாரியங்கள் நடக்கும். தாம்பத்திய சுகம் நல்ல வித மாக அமையும். எதிர்பாராத பொருள் வரவுக்கும் இடமுண்டு.  உங்களுடைய அன்றாடப் பணிகள் சிறப்பாக நடைபெறும். புதிய முயற்சிகளை தேவையறிந்து செய்யவும். உடல் நலனில் அக்கறை செலுத்துங்கள். தந்தை நலனில் கவனம் செலுத்த வேண்டியும் வரலாம். பயணத் தைத் தவிர்ப்பது நல்லது.  

உத்தியோகஸ்தர்களுக்குப் பிரச்சினை உருவாக வாய்ப்பில்லை. ஆனால், எதிர்பார்த்த முன்னேற்றம் சிறிது தாமதத்திற்குப் பிறகு கிடைக்கும். பெரிய நிறுவன நிர்வாகிகளுக்கும் - தொழிலாளர்களுக்கும் நல்லிணக்கம் உண்டாகி ஸ்தாபன வளர்ச்சி இருக்கும். 

வியாபாரிகள் நல்ல லாபம் பெறுவர். விவசாயிகள் மகிழ்ச்சி அடைவர். மருத்துவர்களுக்கு நல்ல செல்வாக்கு உருவாகும். இயந்திரப்பணி தான் சற்று சிக்கல் தரும். மிகுந்த அலைச்சல் உண்டாகும். அதற்கேற்ற லாபம் கிடைக்கும். வேலைகளை முடிப்பதற்கு அரும்பாடு படவேண்டியிருக்கும்.  

அரசியல்வாதிகள் ஏற்றம் பெறுவர். அரசாங்க காரியங்களும், துரிதமுடன் நடைபெற  வாய்ப்புண்டு. உடல்நலம், குடும்பநலம். பொருளாதார நலம் எல்லாமே சிறப்பாக அமையும். சில தொல்லைகள் ஏற்படலாம். ஆனால், அவற்றைச் சமாளிக்கும் ஆற்றல் ஏற்படவும் வாய்ப்புண்டு.  

கலைத்துறை நல்ல விதமாக அமையும். கற்றறிந்த மேலோர் கௌரவிக்கப் படுவர். கணிசமான பொருள் பாக்கியமும் பெற இடமுண்டு. பலவிதமான நன்மைகள் உண்டாகக் கூடிய நல்ல நேரம். உங்களுடைய அந்தஸ்து சிறப்பாக இருக்கும். பொருளாதார சுபிட்சமும் சீராகவே இருக்கும். 

பெண்களுக்கு உற்றார் உறவினர் வருகையும், அதனால் மகிழ்ச்சியும் உண்டு. குறிப்பாகத் திருமண ஏற்பாடு கைகூடி வர வாய்ப்புண்டு. பெற்றோரால் பிள்ளைகளும், பிள்ளைகளால் பெற்றோரும் நலம் காண்பர்.  

மாணவர்- ஆசிரியர் உறவு மகோன்னதமாக விளங்கும். கல்விப் பயனைப் பெறுவதில் இடையூறு இருக்கலாம். எனினும் அதனை சிறப்பாக கையாண்டு வெற்றி காண்பீர்கள்.

மகம்:

இந்த ஆண்டு சற்று சுறுசுறுப்பு குறையலாம். விவசாயிகளுக்கு ஏதேனும் ஒரு வகையில் லாபம் உண்டாகலாம். வியாபாரிகளுக்கு நஷ்டம் இருந்தாலும் அதை ஈடுகட்டும் வகையில் வளர்ச்சி இருக்கும். உடல் நலனில் அக்கறை காட்டுங்கள். வீடு, நிலம் போன்ற இனங்களில் வழக்கு இருந்தால் அதனைச் சமாதான முறையில் தீர்த்துக் கொள்ள முயல்வது நல்லது. இயந்திரத்தொழிலில் ஈடுபட்டுள்ளோருக்கு ஏற்றம் உண்டாகும். 

பூரம்:

இந்த ஆண்டு சுறுசுறுப்புடன் காணப்படுவீர்கள். விவசாயிகளுக்கு உற்சாகமாக இருக்கும். கொடுக்கல் - வாங்கல் திருப்தி தரும். நில புலன்களில் ஆதாயம் காணலாம். வியாபாரிகளுக்கு அளவான லாபம் இருக்கும். கவலை வேண்டாம். மகிழ்ச்சி உண்டு, கொடுக்கல் வாங்கல் திருப்தி தரும். காவல், ராணுவம் போன்ற துறைகளில் உள்ளோர் ஏற்றம் பெறுவர். கலைத்துறையினருக்கு சிறப்பாக இருக்கும். கணவன் - மனைவி உறவு களிப்புடன் விளங்கும்.  

உத்திரம் 1ம் பாதம்:

இந்த ஆண்டு அரசு அலுவலர்களுக்குப் பதவி உயர்வுக்கான வாய்ப்பு கிட்டும். வியாபாரிகளுக்கு இரட்டிப்பு லாபம் வருவதற்கு கிரக அமைப்பு உதவக்கூடும். விவசாயிகளுக்கு வில்லங்கம் ஏதும் உருவாகாது. வழக்குகளில் வெற்றி வாய்ப்பு பெறவும் ஆதாய சூழ்நிலை உண்டு. இயந்திரப்பணி புரிவோருக்கு ஒரு சிக்கல் உருவாகலாம். இரும்பு, பித்தளை போன்ற உலோகத் தொடர்புடையவர்களுக்கு ஓரிரு பிரச்சினைகள் உருவாகலாம். சனி பகவானைத் தொழுது வந்தால் தொல்லை குறையும். 

பரிகாரம்: ஞாயிறுகிழமை தோறும் அருகிலிருக்கும் சிவன் கோவிலுக்குச் சென்று 9 முறை வலம் வரவும்.

******

கன்னி: (உத்திரம் 2, 3, 4 பாதங்கள், ஹஸ்தம், சித்திரை 1, 2 பாதங்கள்)

உங்களுக்கு இந்த ஆண்டு பலவிதமான சங்கடங்கள் வந்தாலும் மனோதிடத்துடன் அணுகி வெற்றி காண்பீர்கள். மனச்சங்கடங்களைச் சமாளித்து விடுவீர்கள். என்றாலும், பெரியோர் நல்லாசியை விரும்பிப் பெறுங்கள். குடும்ப நலம், தாம்பத்திய வாழ்க்கை சீராக இருக்கும். உங்களுக்கு ஏற்படும் பல கஷ்டங்கள் பலமிழந்து போக வாய்ப்புண்டு. எனினும் சான்றோரை சந்தித்து வாருங்கள். உடல் நலனைப் பார்த்துக் கொள்ளுங்கள். கணவன் - மனைவி உறவு கெட இடமில்லை. துன்பங்களைச் சமாளிக்கும் ஆற்றலைப் பெறுவீர்கள். 

உத்தியோகஸ்தர்களுக்கு விரும்பிய உத்தரவு கிடைக்க வாய்ப்புண்டு. உத்தரவைப் பெற பொறுமை காப்பது அவசியம். பொருளாதாரச் சங்கடம் உருவாகாது. அன்றாடப் பணிகளில் குந்தகம் விளையாது.

வியாபாரிகளுக்கு நல்ல லாபம் வருவதற்கான அமைப்பு உண்டு. நல்லோர் நேசமும், சாதுக்களின் தரிசனமும் கிடைக்கும். விவசாயிகளுக்கு மகிழ்ச்சி உண்டு. நில புலன்களில் எந்த விதமான வில்லங்கமும் உருவாக இடமில்லை. மெத்தப் படித்த மேலோர் சமூகத்தில் உரிய மரியாதையுடன் நடத்தப்படுவதோடு, கணிசமான பொருளும் பெற்றும் கலைத்துறையில் மகிழ்ச்சி உண்டு.  அவர்களின் அன்றாடப் பணி தொய்வின்றி நடக்க வாய்ப்புண்டு. எழுத்தாளர்களுக்கு உரிய வாய்ப்பு கிட்டும். கொடுக்கல் - வாங் கலில் நிதானம் இருக்கட்டும்.

அரசியல்வாதிகள் ஒரு குறிப்பிட்ட பிரச்சினையில் சமத்காரமாக நடந்து கொண்டு நற்பெயர் பெற வாய்ப்புண்டு. பொதுவாக கெடுதல்கள் ஏற்படுமானாலும், அந்தக் கெடுதல்கள் அவ்வளவாக பாதிக்காது. உழைப்பு வீண் போனது போலத் தோன்றலாம். ஆனால், அந்த உழைப்புக்கு ஏற்ற பலனை பெறவும் வாய்ப்புண்டு.

பெண்களுக்கு மனம் மகிழும் சம்பவங்கள் நடக்கும்.  குடும்ப சுபிட்சம், தாம்பத்திய உறவு சீராக இருக்கும்.  சுப காரியங்கள் நடக்க இடமுண்டு. குறிப்பாக திருமணம் நடக்கும். மக்கட்பேறு உண்டாகவும் இடமுண்டு. பயணத்தைத் தவிர்ப்பது நல்லது.

மாணவர்கள் ஏற்றம் பெறுவர். உடல் நலம் நல்லவிதமாக இருக்கும். மனதில் சலனம் ஏற்படலாம். தேவையில்லாத எண்ணங்கள் தோன்றலாம். நிதானத்தைக் கடைப் பிடியுங்கள்.  

உத்திரம் 2, 3, 4 பாதங்கள்:

இந்த ஆண்டு அலுவலர்கள் விரும்பத்தகாத உத்தரவுகள் பெற இடமுண்டு. குறிப்பாக  இடமாற்றம் ஏற்படலாம். அரசியல்வாதிகள் அவசரப்பட்டால் அவப்பெயரையே சம்பாதிக்க நேரும். அரசு விரோதத்தைச் சம்பாதிக்காதிருப்பதில் கவனமாய் இருங்கள். தீமைகளைத் தோற்றுவிப்பதில் உங்களைச் சுற்றி உள்ளவர்கள் முனைந்து நிற்பார்கள். கவனம் தேவை. தெளிவான ஆலோசனையும், முயற்சியும் உங்களை அனைத்து கஷ்டங்களில் இருந்தும் காப்பாற்றும்.

ஹஸ்தம்:

இந்த ஆண்டு வியாபாரிகள் லாபம் காண்பர். விவசாயிகளுக்குச் சிறு சோதனை உண் டாகலாம். நன்மைகள் சற்றுத் தூக்கலாக நடக்கும். அரசு அலுவலர்களுக்குப் பிரச்சினை உருவாக இட மில்லை. வியாபாரிகளுக்கு அளவான லாபம் உண்டு. வேதம் அறிந்த விற்பனர்கள் போற்றப்படுவார்கள். எனினும் உஷார் தேவை. கலைத்துறையில் உள்ளவர்களுக்கு அன்றாடப் பணிகள் தட்டுத் தடுமாறி நடக்கும். 

சித்திரை 1, 2 பாதங்கள்:

இந்த ஆண்டு வியாபாரிகள் மிகுந்த அலைச்சல் பட்டே சிறிதளவு லாபம் காண்பர். தொழில் மாற்றம் அல்லது தொழிலில் சலனம் ஏற்படலாம். பயணத்தைத் தவிர்ப்பது நல்லது. கலைத்துறையில் பாதிப்பு உண்டாகாது. நன்மைகள் உண்டாக குரு அருள்வார். மாணவர் - ஆசிரியர் உறவு நல்லிணக்கம் பெறும். விவசாயிகள் எச்சரிக்கையுடன் இருப்பது அவசியம். கலைத் துறை சுறுசுறுப்படையும். குடும்பத்தில் சுமுகம் நிலவும். சுபகாரியம் ஒன்று நடக்கலாம். நன்மைகளும், தீமைகளும் கலந்தவாறு நடக்கவே செய்யும்.

பரிகாரம்: புதன்கிழமை தோறும் அருகிலிருக்கும் ஐயப்பன் அல்லது சாஸ்தான் கோவிலுக்குச் சென்று நெய் தீபம் ஏற்றி  வரவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com