4-ம் கட்ட தேர்தல் முடிவில் சமாஜவாதி இரட்டைச் சதம்: அகிலேஷ்
உத்தரப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் முதல் 4 கட்ட வாக்குப் பதிவின் முடிவில் சமாஜவாதி தலைமையிலான கூட்டணி இரட்டைச் சதம் அளவிலான இடங்களில் வெல்லும் என அந்தக் கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார்.
உத்தரப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி சமாஜவாதி தலைவர் அகிலேஷ் யாதவ் இன்று (புதன்கிழமை) பிரசாரம் மேற்கொண்டார்.
கூட்டத்தில் அவர் பேசியதாவது:
"4-ம் கட்ட வாக்குப் பதிவு நமக்கு இரட்டைச் சதத்தைப் பூர்த்தி செய்யும். சமாஜவாதி தலைமையிலான கூட்டணிக்கு வரலாற்று வெற்றியை உறுதி செய்வது மக்களின் பொறுப்பாகும்.
அமைச்சரின் மகன் விவசாயிகள் மீது காரை ஏற்றினார். தொடக்கத்தில் அரசு எவ்வித நடவடிக்கையையும் எடுக்கவில்லை. எதிர்க்கட்சிகளின் அழுத்தம் காரணமாகவே நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. நீதிமன்றத்திலிருந்து அவருக்கு பிணை கிடைத்திருக்கலாம். ஆனால், மக்கள் மன்றத்திலிருந்து அவருக்கு பிணை கிடைக்காது.
அரசு சொத்துகளையும், நிறுவனங்களையும் பாஜக விற்கிறது. அதனால், அவர்களிடம் கொடுப்பதற்கு வேலை கிடையாது.
உத்தரப் பிரதேசத்தையும், அரசியலமைப்பையும், ஜனநாயகத்தையும் பாதுகாப்பதற்கானத் தேர்தல் இது."
உத்தரப் பிரதேசத்தில் 7 கட்டங்களாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுகிறது. முதல் மூன்று கட்ட வாக்குப்பதிவு நிறைவடைந்த நிலையில், 4-ம் கட்ட வாக்குப் பதிவு காலை தொடங்கி நடைபெற்று வருகிறது. மதியம் 1 மணி நிலவரப்படி 37.45 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளன.