உக்ரைன் எல்லையில் வெட்ட வெளியில் உறையும் குளிரில் காத்திருக்கும் மாணவர்கள்
இந்தூர்: இந்தியாவுக்குத் திரும்புவதற்காக, உக்ரைனிலிருந்து பேருந்து மற்றும் 25 கி.மீ. நடந்து ருமேனியா எல்லையை வந்தடைந்த மாணவர்கள் 2 நாள்களாக வெட்டவெளியில் உறையும் குளிரில் காத்திருப்பதாக மாணவரின் தாய் ஒருவர் கவலையுடன் தெரிவித்துள்ளார்.
போர் நடந்து வரும் உக்ரைனிலிருந்து ருமேனிய எல்லையை வந்தடைந்த ஏராளமான மாணவர்கள், தங்குமிடம் ஏதுமின்றி, வெட்டவெளியிலேயே தங்கியிருப்பதாகக் கூறப்படுகிறது.
இது குறித்து மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரைச் சேர்ந்த காமினி ஷர்மா என்ற தாய், அவரது மகன் விபோர் ஷர்மா (22) பத்திரமாக தாயகம் திரும்ப வேண்டும் என்ற பிராத்தனையோடும் கவலையோடும் காத்திருக்கிறார்.
டெர்னோபிலிலிருந்து ருமேனியா செல்லும் பேருந்து ஒன்றின் மூலம் எப்படியோ என் மகன் வந்துவிட்டார். ஆனால் எல்லையை அடைவதற்குள் ஏதோ சிக்கல் ஏற்பட்டு, 25 கி.மீ. தொலைவிலேயே இறக்கிவிடப்பட்டுவிட்டார்கள். அவர்கள் அனைவரும் 25 கி.மீ. தொலைவுக்கு நடந்தே ருமேனியா வந்தடைந்துள்ளனர்.
அங்கும் அவர்களுக்கு எந்த வசதியும் கிடைக்கவில்லை. வெட்ட வெளியிலேயே அவர்கள் அனைவரும் காத்திருக்கிறார்கள். கடுங்குளிர் நிலவும் அப்பகுதியில், ருமேனியாவுக்குள் நுழையும் மாணவர்கள் அனுமதிக்கப்படவில்லை என்று, மகனுடன் செல்லிடப்பேசியில் பேசி அறிந்து தகவல்களை தெரிவித்துள்ளார்.
அவர்கள் அனைவரும் திங்கள்கிழமைதான் இந்தியாவுக்குத் திரும்புவதற்கான நடவடிக்கைகள் தொடங்கும் என்றும், மிக விரைவாக நான் எனது மகனைப் பார்க்க வேண்டும் என்று விரும்புகிறேன் எனவும் தெரிவித்துள்ளார்.