கேரளத்தில் திரையரங்குகளில் 100 சதவீத இருக்கைகளுக்கு அனுமதி அளித்து அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
இதற்கான உத்தரவை தலைமைச் செயலாளா் ஞாயிற்றுகிழமை வெளியிட்டாா். கேரளத்தில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 2,524 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 64,97,204ஆக அதிகரித்துள்ளது.
தற்போதைய நிலவரப்படி 29,943 பேர் சிகிச்சையில் உள்ளனர். அதேசமயம் கரோனாவுக்கு மேலும் 3 பேர் பலியாகினர். இதனால் மொத்த பலி எண்ணிக்கை 65,223ஆக அதிகரித்துள்ளது. இந்த நிலையில் மாநிலத்தில் கரோனா பரவல் படிப்படியாக குறைந்ததையடுத்து கட்டுப்பாடுகளில் நேற்று முதல் கூடுதல் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன.
இதன்படி திரையரங்குகளில் 100 சதவீத இருக்கைகளுக்கு அனுமதி அளித்து அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. அதேபோல, பார்கள், ஹோட்டல்கள், ரெஸ்டாரன்ட்டுகளுக்கும் விதிக்கப்பட்டிருந்த கரோனா கட்டுப்பாடுகள் முழுமையாக விலக்கிக் கொள்ளப்படுவதாகவும் அரசு தெரிவித்துள்ளது.
மேலும் பொதுக் கூட்டங்களில் அதிகபட்சமாக 1,500 பேர் வரை பங்கேற்கலாம் என்பன உள்ளிட்ட பல்வேறு தளர்வுகளை தலைமைச் செயலாளர் அறிவித்துள்ளார்.