தேசிய தலைநகரில் உள்ள பாரதிய ஜனதா கட்சியின் தலைமையகத்தில் சுமார் 50 ஊழியர்களுக்கு கரோனா தொற்று பாதிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பாஜக தலைமையகத்தில் ஊழியர்கள் (துப்பரவு மற்றும் சேவை செய்பவர்கள்) பாதுகாப்புப் பணியாளர்கள் மற்றும் ஊடக இணைத் தலைவர் சஞ்சய் மயூக் உள்பட சுமார் 50 பேருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
அலுவலகம் முழுவதும் தூய்மைப்படுத்தும் பணி நடைபெற்று வருகின்றது. அலுவலகம் தொடர்பான முக்கிய நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்கள் மட்டுமே தலைமையகத்திற்கு வருவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
உத்தரப் பிரதேச சட்டசபைத் தேர்தல் தொடர்பான பாரதிய ஜனதா கட்சியின் கோர் கமிட்டி கூட்டம், அக்கட்சி அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. அதன் இரண்டாம் கட்ட கூட்டத்தொடர் இன்று நடைபெறவுள்ளது.
மேலும், கடந்த திங்களன்று, பாரதீய ஜனதா கட்சியின் தலைவர் ஜகத் பிரகாஷ் நட்டாவுக்கு கரோனா நோய்த்தொற்று உறுதிசெய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து பல அரசியல் கட்சித் தலைவர்களும் கரோனாவுக்கு பாதிக்கப்பட்டுள்ளனர்.