தேசிய பெண் குழந்தைகள் நாள்: இன்று நாடு முழுவதும் கொண்டாட்டம்

பெண் குழந்தைகளின் உரிமைகள், கல்வி, சுகாதாரம், ஊட்டச்சத்து ஆகியவை பற்றி விழிப்புணர்வை மேம்படுத்தும் வகையில், நாடு முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது
தேசிய பெண் குழந்தைகள் நாள்: இன்று நாடு முழுவதும் கொண்டாட்டம்
தேசிய பெண் குழந்தைகள் நாள்: இன்று நாடு முழுவதும் கொண்டாட்டம்

புது தில்லி: இன்று தேசிய பெண் குழந்தைகள் நாள் கொண்டாடப்படுவதை முன்னிட்டு, பெண் குழந்தைகளின் உரிமைகள், கல்வி, சுகாதாரம், ஊட்டச்சத்து ஆகியவை பற்றி விழிப்புணர்வை மேம்படுத்தும் வகையில், நாடு முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

நாட்டில் பெண் குழந்தைகளுக்கு ஆதரவும், வாய்ப்புகளும் அளிப்பதை நோக்கமாக கொண்டு ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 24 அன்று நாட்டில் தேசிய பெண் குழந்தைகள் நாள் கொண்டாடப்படுகிறது. பெண் குழந்தைகளின் உரிமைகள், கல்வி, சுகாதாரம், ஊட்டச்சத்து ஆகியவை பற்றி விழிப்புணர்வை மேம்படுத்த நாடு முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கொவிட்-19 நிலைமை காரணமாக மத்திய அரசு சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் அனைத்து நிகழ்ச்சிகளையும் இணையம் வழியாக நடத்துவதென முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து சுதந்திரத்தின் 75-வது ஆண்டுப் பெருவிழாவின் ஒரு பகுதியாக பெண் குழந்தைகளின் மெச்சத்தக்க சாதனைகளை அங்கீகரிக்கும் விதமாக 2022-க்கான பிரதமரின் தேசிய பாலர் விருது பெற்றவர்களைப் பாராட்டும் நிகழ்ச்சி காணொலி காட்சி மூலம் நடைபெறும். இந்த விருது பெற்றவர்களுடன்  பிரதமர் இணையம் வழியாகக் கலந்துரையாடுகிறார். இந்த குழந்தைகளும் அவர்களின் பெற்றோர்களும் சம்பந்தப்பட்ட மாவட்டங்களின் ஆட்சியர்களும், மாவட்ட தலைமையகத்தில் நடைபெறும் நிகழ்வில் கலந்து கொள்கிறார்கள்.

பாலர் விருது பெறுவோருக்கு ரொக்கப் பரிசாக ரூ.1 லட்சம் வழங்கப்படும். இது வெற்றியாளர்களின் வங்கிக்கணக்கிற்கு பரிமாற்றம் செய்யப்படும். இணையம் வழியிலான கருத்தரங்குகள் சுதந்திரத்தின் 75-வது ஆண்டுப் பெருவிழாவின் ஒரு பகுதியாக யுனிசெஃப் ஏற்பாடு செய்துள்ள இணைய வழியிலான ‘கன்யா மஹோத்சவ்’ விழாவில் நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த விளிம்பு நிலை மக்களின் குழந்தைகளுடன் மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி சுபின் இரானி கலந்துரையாடுவார். இந்த நிகழ்ச்சி நேரலையாக ஒளிபரப்பப்படும்.

பல்வேறு துறைகளில் குறிப்பிடத்தக்க புதிய கண்டுபிடிப்புகளை செய்திருக்கும் இளம் பெண்களுடன் மத்திய ஜவுளி, தொழில் மற்றும் வர்த்தகம், நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது விநியோகத்துறை அமைச்சர் பியூஷ் கோயல் காணொலி காட்சியில் கலந்துரையாடுகிறார்.

அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையில் குறிப்பிடத்தக்க சாதனைகள் செய்த இளம் பெண் தொழில் முனைவோருடன் மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை இணையமைச்சர் ஜிதேந்திர சிங் இணையம் வழியாக கலந்துரையாடுவார். இதே போல் மகளிருக்கான தேசிய ஆணையம் ஏற்பாடு செய்துள்ள இணையக் கருத்தரங்கில் பெண் குழந்தைகளின் உரிமைகள் மற்றும் பெண் குழந்தைகளின் கல்விக்கான முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் உரைகள் இடம்பெறும் என்று மத்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com