நாடு முழுவதும் பரபரப்பாகப் பேசப்படும் உதய்பூர் படுகொலை வழக்கில், தையல்காரரைக் கொன்றவர்களில் முக்கியமானவர் பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்தவர் என்று காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.
இஸ்லாமுக்கு எதிராகக் கருத்துத் தெரிவித்த நூபுர் சர்மாவுக்கு ஆதரவாகக் கருத்துத் தெரிவித்து வந்ததற்காக, ராஜஸ்தானிலுள்ள உதய்பூரில் தையல்காரர் கன்னையா லால் என்பவர் படுகொலை செய்யப்பட்டார்.
இதையும் படிக்க.. அமராவதியில் மருந்தாளுநர் கொலை, உதய்பூர் போன்ற சம்பவம்: என்ஐஏ விசாரணை
தில்லியில் காங்கிரஸ் தலைமையகத்தில் இன்று செய்தியாளர்களுடன் பேசிய கட்சியின் செய்தித் தொடர்புப் பிரிவுத் தலைவர் பவன் கெரா, மிகவும் முக்கியமான இந்தத் தகவலை ஊடகங்கள் வெளியிட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே, இந்தக் குற்றச்சாட்டை பாரதிய ஜனதா கட்சியின் ராஜஸ்தான் மாநில சிறுபான்மைப் பிரிவு மறுத்துள்ளது.
உள்ளூர் பாரதிய ஜனதா கட்சித் தலைவர்கள் சிலருடன் ரியாஸ் அஹ்தரி இருக்கும் புகைப்படத்தை மட்டுமே வைத்துக்கொண்டு அவர் பா.ஜ.க.வைச் சேர்ந்தவர் என்று கூறிவிட முடியாது என்று சிறுபான்மைப் பிரிவுத் தலைவர் முகமத் சாதிக் கான் தெரிவித்துள்ளார்.
யார் வேண்டுமானாலும் எந்தத் தலைவருடன் வேண்டுமானாலும் சேர்ந்து புகைப்படம் எடுத்துக் கொள்ளலாம் என்றும் அதனாலேயே அவர் பாரதிய ஜனதா உறுப்பினர் ஆகிவிட மாட்டார் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஏதாவது நிகழ்ச்சிக்குச் சென்றபோது அவர், உள்ளூர்த் தலைவர்களுடன் அந்தப் படத்தை எடுத்திருக்கலாம் என்றும் கான் கூறினார்.
தலைவர்கள் அல்லது பிரமுகர்களுடன் இருக்கும் படங்களை முகநூல் அல்லது சமூக ஊடகங்களில் பதிவிடுவது வழக்கமான ஒன்றுதான், அதுபோலவே இந்தப் படத்தையும் பதிவிட்டிருப்பார், அதனால் அவர் பாரதிய ஜனதாவைச் சேர்ந்தவர் என்பது சரியல்ல என்றும் கான் மறுத்துள்ளார்.