வாரிசு அரசியலை இந்தியா வெறுத்துவிட்டது: பிரதமர்
ஹைதராபாத்தில் நடைபெற்று வரும் பாஜக தேசிய நிர்வாகிகள் கூட்டத்தில் வலிமையான இந்தியாவை உருவாக்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி பேசியுள்ளார்.
இந்த நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்து கொண்டு பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது: “ எதிர்க்கட்சிகள் நம்மை எப்படி விமர்சித்தாலும் நமது கட்சியின் நோக்கம் நாட்டு மக்களின் தேவைகளை பூர்த்தி செய்வதே ஆகும். நாடு வாரிசு அரசியலைப் பார்த்தும், வாரிசு அரசியல் செய்யும் கட்சிகளைப் பார்த்தும் நொந்துவிட்டது. இது போன்ற வாரிசு அரசியலில் ஈடுபடுபவர்களாலும், வாரிசு அரசியல் செய்யும் கட்சிகளாலும் நீண்ட காலத்திற்கு நிலைத்திருக்க முடியாது. பாஜக நிர்வாகிகள் நாட்டு மக்களுக்காக சேவையாற்ற கடமைப்பட்டிருக்கிறோம். சர்தார் வல்லபாய் படேல் உருவாக்கிய இந்த ஒருங்கிணைந்த இந்தியாவினை நாம் வலிமை மிக்க இந்தியாவாக உருவாக்க பாடுபட வேண்டும்.” என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், எந்த ஒரு கட்சியின் பெயரையும் குறிப்பிடாமல், பல ஆண்டுகளாக இந்தியாவை ஆட்சி செய்த கட்சி தற்போது அதன் இறுதிக்கட்டத்தில் உள்ளது. நாம் அவர்களை கேலி செய்யக் கூடாது. அவர்களின் தவறுகளில் இருந்து நாம் பாடம் கற்றுக் கொள்ள வேண்டும் என்றார். எதிர்க்கட்சிகள் பாஜகவின் ஜனநாயகத் தன்மை குறித்து விமர்சித்து வருகின்றன. ஆனால், அவர்களது கட்சியில் ஜனநாயகத் தன்மை என்பது இருக்கிறதா எனவும் அவர் விமர்சித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.