குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் ஆதரவளிப்பது தொடர்பாக திரிணமூல் காங்கிரஸ் கட்சி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
நாட்டின் இரண்டாவது உயரிய அரசியல்சாசன பதவியான குடியரசு துணைத் தலைவா் பதவிக்கு அடுத்த மாதம் 6-ஆம் தேதி தோ்தல் நடைபெறவிருக்கிறது. இந்த தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் சார்பில் மேற்குவங்க ஆளுநர் ஜகதீப் தன்கரும், எதிர்க்கட்சிகள் கூட்டணி சார்பாக ராஜஸ்தான் முன்னாள் ஆளுநர் மார்கரெட் ஆல்வாவும் போட்டியிடுகின்றனர்.
இதையும் படிக்க | சிங்கப்பூர் செல்ல தில்லி முதல்வருக்கு அனுமதி மறுப்பு
இந்நிலையில் குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் யாருக்கு ஆதரவளிப்பது என்பது தொடர்பாக திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
இதில் குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் யாருக்கும் ஆதரவளிக்கப் போவதில்லை என அக்கட்சி அறிவித்துள்ளது. இதுதொடர்பான அறிவிப்பை அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அபிஷேக் பானர்ஜி தெரிவித்துள்ளார். ஏற்கெனவே இதுதொடர்பாக எதிர்க்கட்சிகளின் ஆலோசனைக் கூட்டத்தைத் தவிர்த்த திரிணமூல் கட்சி தற்போது தனது நிலைப்பாட்டை அறிவித்துள்ளது.