
அரவிந்த் கேஜரிவால்
சா்வதேச நகரங்கள் உச்சி மாநாட்டிற்கு செல்ல அரவிந்த் கேஜரிவாலுக்கு தில்லி துணைநிலை ஆளுநர் அனுமதி மறுத்துள்ளார்.
சர்வதேச நகரங்கள் உச்சி மாநாடு சிங்கப்பூரில் ஜூலை 31 முதல் ஆகஸ்ட் 3ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவாலுக்கு சிங்கப்பூர் தூதரக அதிகாரி சைமன் வோங் கடந்த ஜூன் மாதம் அழைப்பு விடுத்திருந்தார்.
அதனைத் தொடர்ந்து இந்தப் பயணத்திற்கான அனுமதியை துணை நிலை ஆளுநா் மூலமாக முதல்வர் அரவிந்த் கேஜரிவால் மத்திய அரசிடம் கோரியிருந்தார்.
இதையும் படிக்க | தில்லியில் பள்ளி பேருந்தில் தீ விபத்து: 21 குழந்தைகள் உயிர் தப்பினர்
எனினும் அரவிந்த் கேஜரிவாலின் பயணத்திற்கான அனுமதியை வழங்க தில்லி துணைநிலை ஆளுநர் கால அவகாசம் எடுத்துக் கொண்ட நிலையில் பிரதமா் நரேந்திர மோடிக்கு தனது சிங்கப்பூா் பயணம் தொடா்பாக முதல்வா் அரவிந்த் கேஜரிவால் கடிதம் எழுதியிருந்தார்.
இந்நிலையில் தில்லி முதல்வரின் சிங்கப்பூர் பயணத்திற்கு துணைநிலை ஆளுநர் விகே சக்சேனா அனுமதி மறுத்துள்ளார். இதற்கு பதிலளித்துள்ள அரவிந்த் கேஜரிவால் சிங்கப்பூர் பயணத்தை மேற்கொள்வதில் மாற்றமில்லை எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்க | நான் ஒன்றும் குற்றவாளியில்லை: சிங்கப்பூர் பயணம் குறித்து அரவிந்த் கேஜரிவால்
இதுதொடர்பாக துணைநிலை ஆளுநருக்கு எழுதியுள்ள கடிதத்தில் அவர், “மேயர்கள் மட்டுமல்லாது நகரின் தலைவர்கள், பலதுறை வல்லுநர்கள் உள்ளிட்டோர் பங்கேற்கும் உலக நகரங்களின் உச்சி மாநாட்டில் தில்லி முதல்வர் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தில்லியில் செயல்படுத்தப்பட்டுவரும் முன்மாதிரியான கல்வி, சுகாதாரம் மற்றும் மின்சாரத் துறைகளில் மேற்கொள்ளப்படும் பணிகள் உலக அரங்கில் அங்கீகரிக்கப்படுவது மிகவும் பெருமைக்குரிய ஒன்று எனக் குறிப்பிட்டுள்ளார்.
இந்த விவகாரத்தில் துணைநிலை ஆளுநரின் முடிவுடன் வேறுபடுவதாகத் தெரிவித்துள்ள அரவிந்த் கேஜரிவால், “இதுதொடர்பான தங்களது விளக்கங்களை காரணமாகக் கொண்டால் பிரதமரால் கூட வெளிநாட்டு பயணங்களை மேற்கொள்ள முடியாது. எனவே மத்திய அரசிடம் எனது வெளிநாட்டு பயணத்திற்கு விண்ணப்பிக்க வேண்டும்” எனக் கோரியுள்ளார்.