நாட்டில் நடப்பாண்டில் 200க்கும் அதிகமான நாள்களில் வெப்ப அலைகளின் தாக்கம் இருந்ததாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
உலகம் முழுவதும் காலநிலை மாற்றத்தால் வெப்பநிலையில் மாற்றங்கள் ஏற்பட்டு வருவதாக விஞ்ஞானிகள் தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக காலநிலை மாற்றத்தால் ஏற்படும் வெப்பநிலை மாற்றமானது மிக வேகமாக நடைபெற்று வருவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் இந்தியாவில் கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 13 மடங்கு நாள்களில் வெப்ப அலை பாதிப்பு பதிவாகியுள்ளது தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் வெளியிட்டுள்ள தரவுகளின்படி, கடந்த 2021ஆம் ஆண்டு 36 நாள்கள் பதிவான வெப்ப அலைகளானது நடப்பாண்டு 203 நாள்களாக அதிகரித்துள்ளது.
குறிப்பாக பஞ்சாப் மற்றும் ஹரியாணாவில் கடந்த ஆண்டு 2 நாள்கள் மட்டுமே பதிவான வெப்ப அலைகளானது நடப்பாண்டு 12 மடங்கு அதிகமாக பதிவாகியுள்ளது.
அதிகபட்சமாக உத்தரகண்ட் மாநிலத்தில் 28 நாள்களும், ராஜஸ்தானில் 26 நாள்களும், பஞ்சாப், ஹரியாணாவில் 24 நாள்களும் வெப்ப அலை பதிவாகியுள்ளன.
இதன்மூலம் நாட்டில் கடந்த 122 ஆண்டுகள் இல்லாத அளவு வெப்ப அலை பதிவாகியுள்ளதாகவும், இதன்காரணமாக வேளாண் துறையில் உற்பத்தி பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வெப்ப அலை காரணமாக நாடு முழுவதும் மார்ச் ஏப்ரல் மாத காலத்தில் 12 பேர் பலியாகியுள்ளனர்.
இதையும் படிக்க | செஸ் ஒலிம்பியாட்: பிரக்ஞானந்தா அசத்தல் வெற்றி
இந்தியா மட்டுமல்லாமல் பாகிஸ்தான், சீனா உள்ளிட்ட தெற்காசிய நாடுகளும் 30 மடங்கு அதிகமான வெப்ப அலையை பதிவு செய்துள்ளதாக உலக வானிலை பகுப்பாய்வு மையம் தெரிவித்துள்ளது.