இந்தியாவில் முதன்முதலாக குரங்கு அம்மையால் பாதிக்கப்பட்ட கேரளத்தை சேர்ந்தவர் தொற்று பாதிப்பிலிருந்து முழுவதுமாக மீண்டுள்ளார்.
கடந்த சில தினங்களுக்கு முன்பாக ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து கேரளம் வந்த நபருக்கு குரங்கு அம்மை நோய்த் தொற்று அறிகுறிகள் இருந்தது கண்டறியப்பட்டது. அதனைத் தொடர்ந்து அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவரது பரிசோதனை மாதிரிகளை புணேவில் உள்ள ஆய்வகத்திற்கு அனுப்பி வைத்தனர்.
இதையும் படிக்க | யூடியூப்பில் விடியோ பார்த்து ஒயின் தயாரித்த சிறுவனுக்கு சிக்கல்
அதனைத் தொடர்ந்து பரிசோதனை முடிவுகள் வெளியான நிலையில் அவருக்கு குரங்கு அம்மை பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. மேலும் அவருடன் தொடர்பில் இருந்தவர்களும் மருத்துவ கண்காணிப்பிற்குள் கொண்டு வரப்பட்டனர். குரங்கு அம்மையால் பாதிக்கப்பட்டவருக்கு அரசு மருத்துவமனையில் சிகிச்சையளிக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில் கேரளத்தில் குரங்கு அம்மை நோயால் பாதிக்கப்பட்டவர் முழுவதுமாக குணமடைந்து விட்டதாக அம்மாநில சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பான அறிவிப்பை மாநில சுகாதாரத்துறை அமைச்சர் வீனா ஜார்ஜ் வெளியிட்டுள்ளார். 35 வயதான அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் குரங்கு அம்மை நோய்த்தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், இன்று அவர் வீடு திரும்புவார் என்றும் அவர் குறிப்பிட்டார்.