பொய்யான ஆதாரத்தை அளித்ததால் 6 ஆண்டுகள் மலை ஏறுவதற்கு தடை விதிக்கப்பட்ட இளைஞர் மீண்டும் எவரெஸ்ட் சிகரத்தின் மீது ஏறி சாதனைப் படைத்துள்ளார்.
இந்தியாவைச் சேர்ந்த மலையேற்ற வீரர் நரேந்திர சிங் யாதவ். கடந்த 2016 ஆம் ஆண்டு எவரெஸ்ட் மலை மீது ஏறியதாகக் கூறப்படுகிறது. அவர் எவரெஸ்ட் மீது ஏறியதனை நிரூபிக்கும் விதமாக அவர் மலை உச்சியின் மீது இருப்பது போன்ற புகைப்படங்கள் எடுக்கப்பட்டுள்ளது. ஆனால், அந்தப் புகைப்படங்கள் உண்மையானவை இல்லை என தெரிய வந்தது. இதனையடுத்து, நேபாள அரசு நரேந்திர சிங் யாதவின் மலையேற்ற அங்கீகாரத்தை ரத்து செய்தது.
நரேந்திர சிங் யாதவ் உட்பட மூன்று பேர் 6 ஆண்டுகள் மலையேறுவதற்கு தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில், தடை முடிந்த பிறகு நரேந்திர சிங் யாதவ் மீண்டும் எவரெஸ்ட் மீது சாதனைப் படைத்துள்ளார்.
இது குறித்து நரேந்திர சிங் யாதவ் கூறியதாவது, “ எவரெஸ்ட் மீது ஏறுவது பலரது கனவாக இருக்கும். ஆனால், அது என்னுடைய வாழ்க்கை. என் மீது நிறைய குற்றச்சாட்டுகள் முன் வைக்கப்பட்டன. அதன் காரணத்திலேயே மீண்டும் எவரெஸ்ட் மீது ஏறுவது என முடிவு செய்து அதனை இன்று நிறைவேற்றியுள்ளேன்.” என்றார்.
மலையேறுவதற்கான தடைக்காலம் கடந்த மே 20ஆம் தேதி முடிவடைந்த நிலையில், அடுத்த ஒரு வாரத்திலேயே இந்த சாதனையை அவர் படைத்துள்ளார். மேலும், இந்த முறை அவரது சாதனையை நிரூபிக்க நிறைய புகைப்படங்களை அவர் எடுத்துள்ளார்.
நேபாள அரசும் அவரது இந்த சாதனையைப் பாராட்டி சான்றிதழ் அளித்துள்ளது.