உக்ரைனில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. சமூக வலைதளத்தில் வெளியான விடியோ ஒன்றில், போர் மேகம் சூழ்ந்துள்ள உக்ரைனிலிருந்து இந்தியர்களை மீட்க தலைமை நீதிபதி என்ன நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார் என ஒருவர் கேள்வி எழுப்பியிருந்தார்.
வழக்கு விசாரணையின்போது, இதை மேற்கோள் காட்டிய தலைமை நீதிபதி ரமணா, "சமூக ஊடகங்களில், தலைமை நீதிபதி என்ன செய்கிறார் என ஒரு சிலர் விடியோக்களில் கேள்வி எழுப்புவதை பார்த்தேன். போரை நிறுத்த ரஷிய அதிபருக்கு நான் உத்தரவுகளை விதிக்க முடியுமா?" என கேள்வி எழுப்பியுள்ளார்.
உக்ரைன் எல்லையில் சிக்கியுள்ள 200 இந்திய மாணவர்களை மீட்கக் கோரி தொடரப்பட்ட வழக்கை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஏ.எஸ். போபண்ணா, ஹிமா கோலி ஆகியோர் கொண்ட அமர்வு விசாரித்தது.
அப்போது, மாணவர்கள் சார்பாக நீதிமன்றத்தில் ஆஜரான வழக்கறிஞர், "ருமேனியாவிலிருந்து அல்ல, போலந்து மற்றும் ஹங்கேரியில் இருந்து விமானங்கள் இயக்கப்படுகின்றன. பல மாணவிகள் உட்பட மாணவர்கள் வசதியின்றி திணறி வருகின்றனர்" என்றார்.
இதற்கு நீதிமன்றம், "அவர்கள் மீது எங்களுக்கு எல்லா அனுதாபங்களும் உண்டு. ஆனால் நீதிமன்றத்தால் என்ன செய்ய முடியும்?" என கேள்வி எழுப்பியுள்ளது.
உக்ரைனில் போர் நடைபெற்றுவரும் இடங்களிலிருந்து இந்தியர்களை மீட்க இந்தியா மீ்ட்பு பணிகளை துரிதப்படுத்தியுள்ளது. உக்ரைன் நகரங்கள் மீது ரஷியா குண்டுகளை வீசிவரும் நிலையில், கார்கிவ் நகரிலிருந்து நடந்து சென்றாவது இந்திய அரசால் குறிப்பிடப்பட்டுள்ள இடங்களுக்கு தஞ்சம் அடையுமாறு மாணவர்களை இந்தியா கேட்டு கொண்டுள்ளது.
ரயிலின் மூலம் நகரிலிருந்து வெளியேற உக்ரைன் மக்கள் தங்களை விடவில்லை என மாணவர்கள் புகார் தெரிவித்துள்ளனர். தங்கள் மீது தாக்குதல் நடத்தியதாகவும் அச்சுறுத்தியதாகவும் அவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.