நாளை வெளியாகவுள்ள கோவா மாநில சட்டப்பேரவைத் தேர்தலுக்கான முடிவுகளில் பெரும்பான்மையுடன் ஆட்சியமைப்போம் என பாஜகவின் முதல்வர் வேட்பாளர் பிரமோத் சாவந்த் தெரிவித்துள்ளார்.
உத்தரப்பிரதேசம், மணிப்பூர், கோவா, பஞ்சாப் மற்றும் உத்தரகண்ட் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் நிறைவடைந்துள்ளது. 2024ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலுக்கான முன்னோட்டமாக இந்த சட்டப்பேரவைத் தேர்தல் கருதப்படுவதால் நாளை வெளியாகவுள்ள தேர்தல் முடிவுகள் முக்கிய கவனத்தையும், எதிர்பார்ப்பையும் பெற்றுள்ளன.
இந்நிலையில் திங்கள்கிழமை வெளியான தேர்தலுக்கு பிந்தைய கருத்துகணிப்புகளில் கோவாவில் தொங்கு சட்டப்பேரவை அமையக்கூடும் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், அந்த மாநில காங்கிரஸ் வேட்பாளா்கள் தனியார் விடுதியில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
இதையும் படிக்க | அஸ்வின் வீட்டுக்குப் பூங்கொத்து அனுப்பிய கபில் தேவ்
இதுதொடர்பாக பேசிய மாநில முன்னாள் முதல்வரும், பாஜக தலைவருமான பிரமோத் சாவந்த், கோவா மாநிலத்தில் பெரும்பான்மையுடன் பாஜக ஆட்சியமைக்கும் எனத் தெரிவித்துள்ளார்.
புதன்கிழமை பேசிய அவர், “தேர்தல் முடிவுகளை நினைத்து காங்கிரஸ் கட்சி பயத்தில் உள்ளது. அவர்கள் வேட்பாளர்கள் மீது அவர்களுக்கே நம்பிக்கை இல்லாததால் அவர்கள் கவலையில் உள்ளனர். காங்கிரஸ் கட்சியினர் தங்களின் வேட்பாளர்களை பத்திரப்படுத்தும் வேலைகளில் உள்ளனர்.நாளைய முடிவுகளின்படி பாஜக பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கும்” எனக் குறிப்பிட்டார்.