புது தில்லி: நாட்டில் கரோனா நோய்த்தொற்றுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 42,219 ஆக குறைந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 4,194 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் ஒரே நாளில் 255 பேர் உயிரிழந்தனர்.
நாட்டில் கரோனாவால் பாதிக்கப்பட்டோர் விவரங்கள் குறித்த விவரங்களை மத்திய சுகாதாரத் துறை தினசரி வெளியிட்டு வருகின்றது. இன்று வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள தகவலின்படி,
நாட்டில் புதிதாக 4,194 பேருக்கு கரோனா கண்டறியப்பட்டுள்ளது. மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4,29,84,261 ஆகவும், கடந்த 24 மணிநேரத்தில் 255 பேர் உயிரிழந்தனர். இதனால் இதுவரை கரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தோர் எண்ணிக்கை 5,15,714-ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்தோர் விகிதம் 1.20 சதவிகிதமாக உள்ளது. புதிதாக இறந்த 255 பேர்களில் 227 பேர் கேரளத்தை சேர்ந்தவர்கள்.
நேற்று ஒரேநாளில் 6,208 பேர் கரோனாவிலிருந்து குணமடைந்து வீடு திரும்பினர். குணமடைந்தோரின் எண்ணிக்கை 4,24, 26,328 ஆக உள்ளது. குணமடைந்தோர் விகிதம் 98 சதவிகிதமாக உள்ளது. தற்போது 42,219 பேர் கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுவோரின் விகிதம் 0.12 சதவிகிதமாக குறைந்துள்ளது.
நாடு முழுவதும் இதுவரை 1,79,72,00,515 (179 கோடி) கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 16,73,515 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.