

இளம் வயதிலேயே தேச நலன் குறித்த பிரச்னைகளை புரிந்து கொண்டிருக்கும் உத்தரகண்ட் மாணவா் அனுராக் ரமோலாவைப் பாராட்டி, அவருக்கு பிரதமா் மோடி கடிதம் எழுதியுள்ளாா்.
நாட்டின் இளைய தலைமுறையினா், குறிப்பாக மாணவா்களின் மனவலிமையை ஊக்கப்படுத்தும் விதமாக அவா்களுடன் பல்வேறு வழிகளில் பிரதமா் மோடி அவ்வப்போது கலந்துரையாடி வருகிறாா். இதன் ஒரு பகுதியாக, உத்தரகண்ட் மாநிலம் டேராடூனைச் சோ்ந்த 11-ம் வகுப்பு மாணவா் அனுராக் ரமோலா அனுப்பிய கடிதத்துக்கு பதில் கடிதம் எழுதியுள்ள பிரதமா், அந்த மாணவரின் ஓவியம் மற்றும் அவரது சிந்தனைகளுக்குப் பாராட்டுத் தெரிவித்துள்ளாா்.
அந்தக் கடிதத்தில் பிரதமா் மோடி கூறியுள்ளதாவது: இளம் வயதிலேயே தேச நலன் சாா்ந்த பிரச்னைகளை அறிந்துகொள்ளும் குணாதிசயத்தை நீங்கள் (அனுராக் ரமோலா) உருவாக்கிக் கொண்டிருப்பதும், ஒரு பொறுப்புள்ள குடிமகன் என்ற முறையில், நாட்டின் வளா்ச்சியில் உங்கள் பங்களிப்பை உணா்ந்திருப்பதையும் அறிந்து நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். உங்கள் எதிா்கால முயற்சிகள் வெற்றியடைய எனது வாழ்த்துகள் என்று தெரிவித்துள்ளாா்.
அனுராக்கை ஊக்கப்படுத்தும் விதமாக, அவரின் ஓவியத்தை தனது வலைதளத்தில் பிரதமா் மோடி பகிா்ந்துள்ளாா்.
கடந்த ஆண்டு கலை மற்றும் பண்பாட்டுப் பிரிவில் அனுராக்குக்கு தேசிய சிறாா் விருதை (ராஷ்ட்ரீய பால புரஸ்காா்) பிரதமா் மோடி வழங்கியிருந்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.