உத்தரகண்ட்: பாஜக வெற்றிக்கு உதவிய காங்கிரஸ் உள்கட்சிப் பூசல்

உத்தரகண்ட் மாநில சட்டப்பேரவைத் தேர்தலில், பாஜக 45 இடங்களில் வென்று, மாநிலம் உருவாக்கப்பட்டதிலிருந்து, எந்தவொரு கட்சியும் மீண்டும் ஆட்சியைத் தக்க வைத்துக் கொண்டதில்லை என்ற வரலாற்றை முறியடித்துள்ளது.
உத்தரகண்ட்: பாஜக வெற்றிக்கு உதவிய காங்கிரஸ் உள்கட்சிப் பூசல்
உத்தரகண்ட்: பாஜக வெற்றிக்கு உதவிய காங்கிரஸ் உள்கட்சிப் பூசல்
Updated on
1 min read


டேஹ்ராடூன்: உத்தரகண்ட் மாநில சட்டப்பேரவைத் தேர்தலில், பாஜக 45 இடங்களில் வென்று, மாநிலம் உருவாக்கப்பட்டதிலிருந்து, எந்தவொரு கட்சியும் மீண்டும் ஆட்சியைத் தக்க வைத்துக் கொண்டதில்லை என்ற வரலாற்றை முறியடித்துள்ளது.

மொத்தமுள்ள 70 தொகுதிகளில் காங்கிரஸ் 19 இடங்களிலும், பகுஜன் சமாஜ் மற்றும் சுயேச்சைகள் தலா 2 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளனர்.

அதே வேளையில், உத்தரகண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி, தனது கட்டாமி தொகுதியில் தோல்வியைத் தழுவியுள்ளார்.

தற்போதைக்கு, உத்தரகண்ட் மாநிலத்தில் உள்கட்டமைப்புகளை மேம்படுத்தியிருப்பது, ஆன்மிகச் சுற்றுலாவை மேம்படுத்தியது, பெண்களை மையப்படுத்தும் திட்டங்கள் மற்றும் தேசிய அளவிலான அரசியலை மையப்படுத்தியது போன்றவையே பாஜகவுக்கு சாதகமாக அமைந்திருப்பவை.

டேஹ்ராடூனைச் சேர்ந்த அரசியல் ஆலோசகர் ஜெய் சிங் ராவத் இது பற்றி கூறுகையில், வெறும் நான்கு மாதத்துக்குள் இரண்டு முறை முதல்வர்களை மாற்றியதால் பாஜகவுக்கு ஏற்பட்ட பெரும் பின்னடைவையும் தாண்டி, பாஜக தலைவர்கள் தீவிர அரசியல் பிரசாரம் மேற்கொண்டது, பாஜகவின் நலத்திட்டங்களை அதன் தொண்டர்கள் நேரடியாக மக்களுக்குச் சென்றடையச் செய்தது போன்றவையும் வெற்றியின் காரணிகளாக அமைந்ததாகக் குறிப்பிடுகிறார்.

ஆனால், அதே வேளையில், காங்கிரஸ் தலைவர்களாக இரக்கும் முன்னாள் முதல்வர்கள், மூத்தத் தலைவர்கள் போன்றவர்கள் கூட, மாநிலத்தில் சரியாக முறையில் அரசியல் செய்ய முடியாததும், எதிர்க்கட்சியாக சிறப்பாக பணியாற்றத் தவறியும் விட்டனர்.

மற்றொரு அரசியல் ஆலோசகர் தினேஷ் மன்சேரா பேசுகையில், கரோனா பெருந்தொற்று, எரிபொருள் விலையேற்றம், வேலையில்லாத் திண்டாட்டம் போன்ற தேசிய அளவிலான பிரச்னைகளைக் கூட காங்கிரஸ் கட்சியினர் எழுப்பத் தவறிவிட்டார்கள். இந்த பிரச்னைகள் எல்லாம் இருந்தும்கூட, அதனை மூடிமறைத்து, மோடி தலைமையில் பாஜகவினர் தேர்தலை மிக சிறப்பாக எதிர்கொண்டனர். மோடிக்கு நிகராக காங்கிரஸ் வசம் எந்த ஆளுமையும் இல்லாமல் போனதும் காரணம். இதைத்தான் இந்த தேர்தல் நிரூபித்துள்ளது என்கிறார்.


காங்கிரஸ் கட்சிக்குள் இருந்த உள்கட்சிப் பூசலால், மாநில அரசியலில் கவனம் செலுத்த முடியாமல் போனதும், காங்கிரஸ் கட்சியின் உள்கட்சிப் பூசல், வெளிப்படையாகவே இருந்ததால், மக்களுக்கு காங்கிரஸ் கட்சியின் மீது ஏற்பட்ட அதிருப்தியும், இந்த தேர்தலில் பிரதிபலித்திருப்பதாகக் கூறப்படுகிறது.

கடந்த ஆண்டு, கால்நடைகளுக்கு தீவனம் கொடுக்கும் காஷியாரி யோஜ்னா என்ற திட்டத்தை பாஜக அரசு அறிமுகப்படுத்தியது. இது பெண்கள் வெகு தொலைவு சென்று கால்நடைகளுக்குத் தீவனம் கொண்டு வரும் பணியைக் குறைத்திருந்தது. உத்தரகண்ட் மாநிலத்தில் பாஜகவின் வெற்றிக்கு உதவிய வாக்குகளில் பெண்களின் வாக்குகளும் கணிசமானதாக அமைந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com