ஒரு ரூபாய் பிச்சைக்காரர்; இறுதிச் சடங்கில் 4,000 பேர் பங்கேற்பு

ஒரு ரூபாய் மட்டும் பிச்சை வாங்கி வந்த பிச்சைக்காரரின் இறுதிச் சடங்கில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்ற சம்பவம் தற்போது வைரலாகி வருகிறது.
ஒரு ரூபாய் மட்டும் வாங்கிய 'புகழ்பெற்ற' பிச்சைக்காரர்
ஒரு ரூபாய் மட்டும் வாங்கிய 'புகழ்பெற்ற' பிச்சைக்காரர்

ஹூப்பலி: பிறந்த ஆனாதையாகவே வளர்ந்து, சுமார் 40 ஆண்டுகள் யாருக்கும் தொல்லை கொடுக்காமல், ஒரு ரூபாய் மட்டும் பிச்சை வாங்கி வந்த பிச்சைக்காரரின் இறுதிச் சடங்கில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்ற சம்பவம் தற்போது வைரலாகி வருகிறது.

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் சாலை விபத்தில் பலியான அந்த பிச்சைக்காரரைப் பற்றிய செய்தி தற்போது பலராலும் பகிரப்பட்டு வருகிறது.

பேருந்து நிறுத்தத்துக்கு அருகே ஒரு சிறிய குடில் அமைத்து, அதில் வாழ்ந்து வந்தவர் பசப்பா. மனநலப் பிரச்னையுடன் வாழ்ந்து வந்த இவர், தனது அடிப்படைத் தேவைக்காக பிச்சை எடுத்து வந்தார். கடந்த ஆண்டு நம்பர் மாதம் சாலை விபத்தில் பலியான இவரின் இறுதிச் சடங்கில் ஆயிரக்கணக்கான கலந்து கொண்டனர். இந்தச் செய்தி தற்போது வைரலாகியுள்ளது.

பசப்பா என்கிற ஹச்சா பஷ்யா.. இவரை இப்படியும் சொல்லலாம்... அப்பகுதியில் இருந்த புகழ்பெற்ற பிச்சைக்காரர். ஹூவினா ஹடாகலி பேருந்து நிலையத்துக்கு வந்திருக்கும் பயணிகள் அனைவருக்கும் இவரைப் பற்றி தெரிந்திருக்கும். ஏன் அப்படி? பிச்சைக்காரர்களில் என்ன புகழ்பெற்ற பிச்சைக்காரர் என்கிறீர்களா.. இருக்கிறது. இவர் யாரிடமிருந்தும் ஒரு ரூபாய்க்கு மேல் பிச்சை வாங்க மாட்டார். இவர் கேட்பதே ஒரு ரூபாய் தான்.  அதனாலேயே இவரை பலரும் அறிந்திருந்தார்கள்.

அங்கிருந்த ஒரு நபர், இவரைப் பற்றி கூறுகையில், இவர் எந்தப் பகுதியைச் சேர்ந்தவர் என்பதோ எங்கிருந்து வந்தார் என்பதோ யாருக்கும் தெரியாது. ஆனால், இவர் மிகவும் அதிர்ஷ்டசாலி என்று உள்ளூர் மக்கள் நம்பினார்கள்.  இதேப் பகுதியில் தான் சுமார் 40 - 45 ஆண்டுகளாக அவர் பிச்சை எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். பலரும் இவருக்கு உணவு வாங்கிக் கொடுப்பார்கள். மாவட்ட நிர்வாகம் இவரை மறுவாழ்வு மையத்துக்கு அழைத்துச் செல்ல முயன்ற போது, உள்ளூர் மக்கள் அதனைத் தடுத்து இங்கே இருக்க வைத்தனர் என்கிறார்.

பேருந்து மோதி பலத்த காயமடைந்து அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சை பலனின்றி 3 நாள்களுக்குப் பின் பலியானார். இவர் பலியான சம்பவம் அறிந்ததும் நூற்றுக்கணக்கானோர் மருத்துவமனை முன்பு கூடினார்கள். உள்ளூர் மக்கள், வியாபாரிகள் என ஏராளமானோர் பணம் திரட்டி அவரது இறுதிச் சடங்கை செய்தனர்.

நூறு அல்ல இருநூறல்ல சுமார் 3 முதல் 4 ஆயிரம் பேர் பசப்பாவின் இறுதிச் சடங்கில் கலந்து கொண்டனர் என்கிறார்கள் நேரில் பார்த்தவர்கள்.

அவர் சிறிது நேரம் அவரது குடிசையில் இல்லை என்றாலும் உள்ளூர் மக்கள் அவரைத் தேடத் தொடங்கி விடுவார்களாம்.

அவருக்கு ஒரு ரூபாய் கொடுத்தால் போதும், அழகாக புன்னகைத்தபடி வாழ்த்துவார். இவர் இதுவரை யாரையும் துன்புறுத்தியதில்லை என்று பசப்பாவின் பெருமைகளைப் பேசியபடியே கவலையோடு அவரது குடிசையைக் கடந்து செல்கிறார்கள் உள்ளூர் மக்கள். கடந்த ஆண்டு நடைபெற்ற இந்தச் சம்பவம் தற்போது வைரலாகியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com