மகாராஷ்டிரத்தில் கடந்த 4 ஆண்டுகளில் மட்டும் 2 லட்சத்துக்கும் அதிகமான மரங்கள் சட்டவிரோதமாக வெட்டி சாய்க்கப்பட்டுள்ளதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.
மகாராஷ்டிர மாநிலத்தில் வெட்டப்பட்ட மரங்கள் குறித்த சிவசேனை சட்டப்பேரவை உறுப்பினர் மனீஷா கயண்டே எழுப்பிய கேள்விக்கு முதல்வர் உத்தவ் தாக்கரே எழுத்துப்பூர்வமாக பதிலளித்துள்ளார்.
அதில் அவர், கடந்த 4 ஆண்டுகளில் 2 லட்சத்து 84 ஆயிரத்து 171 மரங்கள் மாநிலம் முழுவதும் சட்டவிரோதமாக வெட்டப்பட்டுள்ளதாகவும், இதன் மொத்த மதிப்பு ரூ.21.95 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த விவகாரத்தில் 48,893 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், இவற்றில் 1,435 வழக்குகள் தீவிரத்தன்மை கொண்டது எனவும் அந்த பதிலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிக்க | அரசு மருத்துவர்களுக்கு 50% இடஒதுக்கீடு:முதல்வர் வரவேற்பு
மரங்களை வெட்டிக் கடத்தியது தொடர்பாக கடந்த 4 ஆண்டுகளில் மட்டும் 991 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மேலும் 2019 முதல் 2021 ஆண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் மும்பையில் 1.08 சதுர கி.மீ. மாங்குரோவ் காடுகளின் பரப்பு குறைந்துள்ளதாகவும், மாநிலம் முழுவதும் உள்ள மாங்குரோவ் காடுகளின் பரப்பில் 8,000 சட்டவிரோத கட்டுமானங்கள் கட்டப்பட்டுள்ளதாகவும் உத்தவ் தாக்கரே வெளியிட்டுள்ள எழுத்துப்பூர்வ பதிலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.